Tags

 

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்

சுடும் கரை மணல் தொடுகையிலும் …

 

நிசப்த்தமான தெருக்களில்

நீண்ட தனி நடைகளிலும் …

 

மழை முடிந்த பின்

ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

 

கூட ஒட்டி வரும் தனிமையிலும்  

 

தேடிப்பார்க்கிறேன்

நாம் சந்தித்ததற்கான தடையங்கள்

ஏதேனும் உளதா என ..

 

 

நேற்றைய சந்திப்புகள் வெகுதூரம்

தாண்டிச் சென்றுவிட்டிருக்கின்றன

 

இன்றுகள் தொடர்ச்சியாக

இணைந்து கொண்டிருக்கின்றன அதே

இரயிலின் கடைசிப் பெட்டிகளாக …

 

தவிர்க்க முடிவதில்லை

 

தென்னங் கீற்றுகளிடை 

சிரித்திடும் விண்மினிகளின்

நினைவு படுத்துதலை …

 

தனித்துண்ணும் எனை எள்ளும்

முட் கரண்டிகளின்

வளைந்து குத்தும் பரிகாசங்களை …

 

வெகுநேரம்

வெறித்துப் பார்க்கப்படும்

புத்தகங்கள் வெறுப்புற்றுக் காற்றுடன்

உரையாடும் சரசரப்பை …

 

நடு இரவில்

தன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்

வெளிச்சம் சுருக்கிக் கொள்ளும்

இரவு விளக்கின் பின் 

ஒளிந்து கொள்ளப் போகும்

சுவர் பல்லியை  ..

 

தவிர்க்க முடிவதில்லை

 

மீண்டும் மீண்டும்

சுற்றிச் சுழன்று

மாட்டிக் கொள்கிறேன்

மெல்லினங்கள் ஏற்படுத்தும்

மீள முடியாக் காயங்களில் …

 

சுழல் மீண்டு வரும் பொழுது

எல்லாம் மறந்து

தேடத் துவங்குவேன் மீண்டும்

நாம் சந்தித்ததற்கான தடையங்கள்

ஏதேனும் உளதா என ..

 

எல்லாத் தடயங்களையும்

என்னுள் தொலைத்துவிட்டு

இல்லை ..

மறைத்து வைத்த இடம் 

மறந்து விட்டு போய் விட்டு  .