வலுக்கட்டாயமாக
என் துயில் உறியப்படும்
சாமங்களின் மீதங்கள்
இமைகள் மூடாமலேயே
கரிய இருளின் பின்னே கழிகின்றன
ஒரு குருடனின்
நீண்ட நண்பகலைப் போல
அறையின் குருட்டு அமைதி
வெளி முழுதும்
விரவிக் கிடக்கின்றன
பேசிய
பேசப்பட்ட வார்த்தைகள்
உன் நினைவுகள் கோர்க்கச்
சேர்க்க முயல்கிறேன்
அவற்றின் கோடிட்ட இடங்களின்
நிரப்பிகளை
விரும்பித் தற்கொலை செய்து கொள்ளும்
சில பூக்களைப் போல
மொழிபெயர்ந்து
அறிவித்துக் கொள்கின்றன
மௌனங்களென்று
தங்களைத் தாங்களே
குருடன் நானும்
வருடி வருடி
கேள்வி மறந்த வேதாளமாய்
வார்த்தைகள் மயங்க
உறங்கச் செல்கிறேன்
விடியல்களில் …