Tags

 

முன்னறிமுகமில்லாத தெருக்களே

தூண்டிலெனக் குத்தி இழுத்து

கண்களில் பாய்ச்சுகின்றன கவனத்தை

 

இறந்து போன

ஏதோ ஒரு இரவில்

இங்கு தானா வந்து போனது

 

அடைக்கப் பட்ட வாகனத்தில்

சென்றாலும்

கருப்பு பூசிய கண்ணாடியை

ஊடுருவிப் பார்க்கின்றன கண்கள்

 

உடன் வருபவன் பற்றிய

ப்ரக்ஞை ஏதுமின்றி

வளையும்  வரை

திரும்பியே இருக்கிறது

கழுத்தும் மனமும்

  

இங்குதானா

இரவைக் கடந்தது

அவள் கைப்பிடித்து

 

இத்தூங்குமூஞ்சி மரங்களா

அகாலத்தில் பூச்சொரிந்தது

என் முதல் முத்தம் பார்த்து

 

இந்த வீட்டின் படுக்கையறையிலா

தூங்கும் அவளைப் பார்த்துக் கொண்டே

புத்தகம் படிக்கக் கற்றுக் கொண்டது

 

நீலப் பூமரம்

சாலையிலோடும் மானும்

பால் சிந்தப் பார்க்கும் நிலவும்

அன்றைய மௌனத்தின் இசையும்

அதே சில்லிட்ட காற்றும்

அன்று போலவேயிருந்தும் 

காணவேயில்லை 

இந்தத் தெருவிலும் அவளை

 

விரும்பியோ பலவந்தமாயோ

பின்வரு நாட்களில்

இவைகளில் ஏதாவது நடக்கக் கூடுமென

இல்லாத

அவள் தெரு பற்றிய குறிப்புகளைச்

சேகரித்துக் கொண்டேயிருக்கிறது

ஏகாந்தத்தில் மனது .