Tags

இரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்

ரகசியங்களின் நிழல்களை

உற்றுப்பார்த்துக்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன

விண்மீன்கள் …

எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்

எலிகள் வரக்கூடுமென

புகைபோக்கியின் துளைகளும் கூட

அடைக்கப்பட்ட பின்னும்

கூரைகளைத் துளைத்து

எட்டிப் பார்க்கின்றன அவைகள்

இடுக்குகளின் வழியே கசிந்து கொண்டிருக்கும்

இருளின் வழியே …

பார்க்க யாருமில்லை

என்ற எண்ணம் வேண்டாம்

நுழைய முடியாத இடங்களுக்கு கூட

ரீங்கரித்துக் கொண்டிருக்கும்

வண்டினங்களை விரட்டி

பார்த்துவரச் செய்கின்றன

அவைகள் …

விட்டத்தை வெறித்துப் பார்த்துவிட்டு

இமைகள் மூடி உறங்க முற்படும்

நம் எண்ணங்களைக் கூட

சத்தமில்லாமல்

திருடி விடுகின்றன …

புரண்டு புரண்டு

தூக்கம் கொள்ளாது

ஜன்னல்கள் விடுவித்து

அகாலத்தில்

அவைகளைக் காண்கையில்

தூங்கச் சென்றுவிட்டிருக்கின்றன

சொல்லிக் கொள்ளாமலேயே ..