Tags

,

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

 

இரவல் வெளிச்சம்

இழந்த நிலவு

மின்மினிகளைக் கேட்டு அனுப்புமோ …

 

எங்கே எந்தன்

காதல் நெஞ்சம்

இனியும் தேட மாட்டேன்

நானும் ..

 

பார்த்து வந்த

இடங்கள் எல்லாம்

காத்திருந்தன

கவிதைகள் மட்டும்…

 

 

 

—————————————————-

 

உடைந்த வார்த்தைகளை

உதிரம் கொண்டு ஒட்ட வைத்து

உனக்கு மாலை தொடுத்திருந்தேன்

கவிதை என்கிறாய்..

 

————————————–

 

எங்கோ விழும்

மின்னல்கள் …

இடி மட்டும்

என்னுள் …

 

கடலோரம் நிற்பதாய்

குறி சொல்லிச் சென்றன

சில

குளிர் தேசப் பறவைகள் …

 

எனக்கும் சிறகுகள்

உண்டு

உடைந்து போன இறகுகள்

கொண்டு…

உன் நிழல் போதும்

நிஜமா கேட்கிறேன் ?

 

பழகிய நாட்கள் கூட

மறந்திருக்காது …

 

உருகிய உன்னால்

எப்படி முடிந்தது

உடைத்துக்கொண்டு போக …

 

சில கவிதைகள்

இப்படியே முடிகின்றன

முடிவு தெரியாத

என் போல …

 

—————————————————