Tags

, , , , ,

 

 

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்

 

பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்

 

யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம்

வா

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்

 

மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து

ஊதித் தீ மூட்டுவோம்

 

அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்

 

சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

 

***