Tags
வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்
யாரும் நுழையா காடு என்னிடம்
வா
உதிர்ந்த நிறங்களை அள்ளி
பூக்களில் தூவுவோம்
பிரளயத்தின் நா உன்னிடம்
பெருந்தாகம் என்னிடம்
வா
கொஞ்சம் ஒயின் ஊற்று
இதயங்கள் நனைப்போம்
யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்
காலத்தின் முடிவிலி என்னிடம்
வா
இந்த இரவின் நதியினில்
இரு மீன்களாவோம்
மின்மினிகள் உன்னிடம்
காய்ந்த சுள்ளிகள் என்னிடம்
வா
உள்ளங்கைகளுக்குள் வைத்து
ஊதித் தீ மூட்டுவோம்
அரூபத்தின் தேகம் உன்னிடம்
ரகசியத்தின் சாவி என்னிடம்
வா
மோனத்தின் பனியிடுக்குகளில்
கஸல்கள் தேடுவோம்
சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்
மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்
வா
நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்
வேடிக்கை பார்த்திருப்போம்
***
மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் வாழ்த்துகள்
LikeLike
நன்றி நண்பரே !
LikeLike