யௌவனத்தில் நடுங்கும் இரவு 17 Monday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsகாதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem மூன்றாம் ஜாமம் முடிவதற்கு சற்றுமுன்பு என் இரவினில் இறங்குகிறாய் சலனமில்லாத் தெப்பம் போல் என்னைப் புதைத்திருக்கும் இருளுள் உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய் முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய் ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும் அறையின் ஏகாந்தத்தை உன் ஒற்றைச் சிரிப்பில் ஊதி அணைக்கிறாய் கூரையிலிருந்து பெரு மழையாய் பொழிகின்றன பனியில் உறைந்த உனது செதில்கள் ஆயிரம் தலைகளுடன் சுவர் மொத்தமும் நெளிகின்றது உனது நிழல் ஆலகாலம் போல் காற்றை நிறைக்கிறது உனது சுவாசம் உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று இந்த இரவிற்கென என்னை ஆயத்தப்படுத்துகிறது எனது முதல் துளிக் கண்ணீரை நா நீட்டிச் சுவைக்கிறாய் மரணத்தின் வேட்கை போல் எவ்வளவு உறிஞ்சியும் தீரவேயில்லை உன் தாகம் உனது யௌவனத்தில் நடுங்கும் என் இரவு உன்னை ஆயாசமடையச் செய்கிறது அருகே படர்கிறாய் உனது ஆலிங்கனத்தில் பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின் படபடப்பு பற்றி எரிகிறது படுக்கை உறைபனி விரல்களால் மார்பினை வருடிக் கண்களை மூடச் செய்கிறாய் காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும் நூற்றாண்டுகளின் தனிமையினையும் என் காதோரமாய் சபிக்கிறாய் பின் உனது பற்களை அழுத்தி என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய் *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading... Related