உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள் 29 Monday Mar 2021 Posted by rejovasan in Uncategorized ≈ Leave a comment Tagsகாதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், Love poems, tamil Kavithaigal ஊதா நிற துலிப் மலராடையில் நீ கதவைத் தட்டிய நொடியில் துவங்குகிறது இந்த வருட பனிக்காலத்தின் முதல் நாள் உள்ளே வரலாமா என்கிறாய் உனதாடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரத் துணுக்குகளின் மின்னல்களாலும் உன் கூடுதல் புன்னகையினாலும் கார் முகப்பொளிக்கு திடுக்கிட்டு உறைந்து பார்க்கும் நெடுஞ்சாலை மான் போல் நிற்கிறேன் வருகிறாய் தேனீரெல்லாம் கிடையாதா என்கிறாய் அடுப்பில் தேனீர் கெண்டி மூடி நடுங்கிச் சத்தமிடுகிறது ராணியை எடுத்து என் சிப்பாய் ஒருவனைக் கருணையின்றிக் கொலை செய்து எதிரே இருக்கும் காலி நாற்காலியில் அமர்கிறாய் இந்த நாள் இங்குதான் உன்னுடன் தான் என்கிறாய் மது ஊறிய மிட்டாய் ஒன்றை பாதி கடித்து மீதம் புகட்டுகிறாய் இன்னமும் பிடிக்கும் தானே பின்பே கேட்கிறாய் இப்படியாக சட்டென்று பற்றிக் கொள்கிறது என் சோம்பேறி ஞாயிறு பரிசாகக் கொண்டு வந்த புத்தகத்தின் பக்கங்கள் புரட்டி உனக்கும் பிடித்த வரிகளை விரல்களாய் அடிக்கோடிடுகிறாய் கூடுதல் அடையாளமாய் உன் நகப்பூச்சினை கொஞ்சம் உதிர்க்கிறாய் வாடைக் கூந்தல் வாசத்துடன் அரை நொடிக்கொருமுறை புன்னகை செய்கிறாய் உன் வியர்வை கூடிய வாசனை திரவியத்தின் பெயரை முடிந்தால் கண்டுபிடியென பகடி செய்கிறாய் படாமலேயே நெருங்கி வந்து உன் ஸ்பரிசங்கள் கடத்துகிறாய் தவறி உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சியாய் வீடு மொத்தமும் சுற்றி வருகிறாய் போகிற போக்கில் சுவற்றில் உன் பெயர் எழுதிச் செல்கிறாய் கலைந்த என் பொம்மைகளை பிரியம் போல் அடுக்கி வேறொரு கதை சொல்கிறாய் நம் பழைய புகைப்படங்களைத் தரையில் பரப்பி நம்மைத் தேடுகிறாய் பின் இந்த புகைப்படங்கள் வேறு யாரோ இருவரின் வாழ்கை போல் இருக்கிறது எனக்குக் கேட்கா வண்ணம் முனுமுனுக்கிறாய் சிரித்துக் கொண்டே எங்கோ இதேபோலொரு பிரபஞ்சத்தில் வாழக்கூடும் என்கிறாய் படுக்கை அறையின் ஒரே புகைப்படச் சட்டத்தில் உன் உதட்டுச்சாயம் பதியமிடப்பட்ட கைக்குட்டையென்றைக் கண்டு பெருமூச்செறிகிறாய் மீண்டும் பூக்குமாயின் தொலைத்துவிடாதிருக்கச் சொல்கிறாய் இத்தனை காலத்திற்கும் இனிவரும் நாட்களுக்கும் சேர்த்து நீ இசைக்கும் சொற்களை அறைச்சுவர்கள் கவனமாய் சேகரிக்கின்றன வார்த்தைகள் தீர்ந்து போய் கண்கள் மூடி அமர்கிறாய் இப்படியே இங்கேயே இருந்துவிட ஆசையென்கிறாய் ஜன்னல் திரைசீலையின் வரிகள் வழி நுழையும் நிலா நிழல் உன் மேல் படர்ந்து மீன் துண்டுகளைப் போல் நறுக்குகிறது இந்த நாள் முடிவிற்கு வந்துவிட்டது படபடப்படைகிறாய் காலையில் நின்ற அதே கதவருகில் கிளம்பட்டுமா என்கிறாய் அதே நெடுஞ்சாலையில் அதேபோலவே நிற்கிறேன் என் கண்களை ஆரத்தழுவி வெகுநேரமாய் பார்த்துக்கொண்டிருக்கும் உன் உதடுகள் துடிக்கின்றன வீடெதிரே இருக்கும் மேப்பிள் மரமொத்தமும் செஞ்சாந்து இலைகள் பூக்கத் துவங்கும் வசந்தத்தின் முதல் நாளில் மீண்டும் சந்திப்போம் அம்மரத்தின் கடைசி இலை காற்றில் சுழன்று கரைந்தது போலே காணாமல் போகிறாய் பனிப்பூனையொன்று கதவு பூட்டும் முன் காலோடு உரசி உள்ளே நுழைகிறது சதுரங்கப் பலகை மேல் இன்னொரு கைக்குட்டை இந்தமுறையும் விட்டுச் சென்றிருக்கிறாய் உன் உதடுகளை வாழ்ந்திருப்பதற்கு சிறிது வெளிச்சம் மட்டுமே போதுமான அந்தூரியச் செடிக்கு இன்றைய நாளின் நினைவுகளை உண்ணத் தருகிறேன் நீ சொல்லியிருக்க வேண்டும் என்கிறது நீ தந்திராத முத்தங்களை மென்று கொண்டு சொல்லியிருக்க வேண்டும் கேட்டிருக்க வேண்டும் கொடுத்திருக்க வேண்டும் பூத்தொட்டியை ஒட்டிய சாய்வு நாற்காலியில் சரிந்தபடி என் கால்களைக் கழற்றி எறிகிறேன் அருகிலெரியத் துவங்கியிருக்கும் கனப்படுப்பில். **** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading... Related