பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Author Archives: rejovasan

ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்

21 Sunday Mar 2021

Posted by rejovasan in Uncategorized

≈ 1 Comment

Tags

காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், tamil kavithai, tamil poem

How to Create Personal Affirmations

என்

தசாப்தக் காத்திருப்பினை 

ஓரு புன்னகையால்

கடந்து சென்றவள் நீ 

வழி தவறிய கானகத்தில் 

கடைசி தீக்குச்சியின் 

நடுங்கும் சுடர் நீ

யாக்கையின் விரிசல்களினூடே

கசிந்துருக்கும் பனிக்காலத்தின் 

பசி நீ

நெடுந்தூரப் பயணத்தின்

சட்டென்று கடந்து போகும் 

மீட்கொணரமுடியா

நினைவிலின்றும் அகலா

நட்சத்திரப் பூ மரம் நீ

என் இன்னுமொரு 

அசைவறு மாலையின்

வெயில் எரித்துப் படரும்

காமத்தின் நா நீ

எறும்புகளுக்கும் கொஞ்சமாய் 

மீதமிட்டுச் செல்லும்

சிட்டுக் குருவியொன்றின் 

கருணை நீ

வலியின் நினைவுகளை

வருடப் புதைத்திருக்கும்

அரூபத் தழும்பு நீ

பிரபஞ்சத்தின் ஆசைகளெல்லாம் 

விழுங்கிச் செரித்திருக்கும்

செயற்கை நீரூற்று ஒன்றில்

அசைந்து அமிழும்

தாமிர நாணயம் நீ 

நாட்குறிப்பேட்டில் 

தேதியிட்டுப் பதுக்கி வைக்க

கனவுத் தூண்டிலில்

சிக்கி முறிந்த மின்னல் நீ

துருவேறிப்போன 

ரயில் ஜன்னல் கம்பியின்

மழை வாசம் நீ

ஒரு குறுவாள் தீண்டலில்

உறையச் செய்திடும்

மெடூசாவின் கண்கள் நீ 

அவற்றின் 

ஆயிரம் முத்தங்கள் நீ

****

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

அரூபனின் பிரார்த்தனைகள்

17 Wednesday Feb 2021

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poem, tamil poem

இன்னும் ஐந்து நிமிடங்கள்

இருக்கின்றன

எரியும் நட்சத்திரமொன்று

என் ஜன்னல் வானத்தில்

உன் பெயர் வெடித்துச் சிதற

அதற்குள் துவங்கிவிடுகின்றேன்

எனது பிரார்த்தனைகளை

நாளையேனும்

மின் தூக்கியின்

கதவு திறக்கக் காத்திருக்கையிலோ

சாலைப் போக்குவரத்தின்

சிகப்பிற்கும் பச்சைக்கும் இடையிலோ

பல்பொருள் அங்காடிக் கடையொன்றில்

கடனட்டை தேய்க்குமிடத்திலோ

இசைக்கருவிகளை

வெயிலில் போட்டு விற்கும்

சாலையோர வியாபாரியைக்

கடக்கையிலோ

தொட்டிகளில் பூக்கள் அடைத்துத் தரும்

விற்பனைத் தோட்டத்திலோ

நீ எதிர்ப்படுகையில்

உனது கண்களைச் சந்தித்துக்

கால்கள் தரையில்

நிற்க வேண்டும்

மௌனத்தினை

மறக்க வேண்டும்

புன்னகை மட்டும்

போதாது

தேநீர் பிடிக்குமா

எனக் கேட்க வேண்டும்

அதைத் தெருமுனைக் கடையில்

என்னுடன் அருந்தப் பிடிக்குமா எனவும்

நான் எழுதிக் கொண்டிருக்கும்

நாவலின் நாயகி

உன்னப்போலவே சிரிக்கிறாள்

எனச் சொல்ல வேண்டும்

குறைந்த பட்சம்

என் பெயரையாவது

****

இன்னமும் நான்கு நிமிடங்கள்

இருக்கின்றன

இந்த நாளுக்கான கடைசிப் பூ

பூக்க

அதற்குள் அறிந்து கொள்கிறேன்

உன்னை

நேற்றைய கனவில் நீ அணிந்திருந்த

ஆடையின் நிறம் தான்

உனது விருப்பத்துக்குகந்ததா

தேவதைக் கதைகளின் சாபத்தில்

உன் சாயல் கண்டதுண்டா

மழை பிடிக்குமா

சமீபத்தில் படித்த புத்தகத்தின்

ஏதேனும் ஒரு பக்கத்தில்

புன்னகை மடித்து வைத்திருக்கிறாயா

எனது கவிதைகள்

எதுவாயினும் என்றாயினும்

உன்னைச் சேர்ந்ததுண்டா

நாட்குறிப்பு எழுதுவாயா

பெயரிலியாகவேணும் அதில்

நானுண்டா

பண்பலையில் இந்த நொடியில்

ஒலிப்பரப்பாகும்

நானுனக்கு அர்பணித்த பாடலை

நீயும் கேட்டுக்கொண்டிருக்கிறாயா

எனக்கான முதல் முத்ததை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

யாரையேனும் காதலித்திருக்கிறாயா

உனக்கும் கண்ணீர்

வருமா

யோசித்துப் பார்க்கையில்

நான் காதல் கொண்டது

உன்னைப் பற்றி நானே

உருவக்கிக் கொண்ட பிம்பங்ளிலும்

அதன்  பிரதிபலிப்புகளிலுமே

நீ அதன் உருவகம்

அவ்வளவே

இவைகள் எதுவுமே நீ இல்லாமலும்

போகக்கூடும்

எனில்

நான் காதல் கொண்டது

எந்த நீ

****

இன்னும் மூன்று நிமிடங்கள்

இருக்கின்றன

சாம்பற் பூனைகள் கூட்டம்

ராட்சச

பச்சை நிறக் குப்பைத் தொட்டிகளில்

வீணடிக்கப்பட்ட உணவுகள் வழியும்

நெகிழிப் பேழைகளைக்

கிழித்துத் தேடத் தொடங்க

அதற்குள் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்

என்னை

கூடவே

எனை நீ எங்கே சந்தித்திருக்கக்கூடும்

என்பதையும்

நகல் எடுக்கும் கடையொன்றில்

காகிதக் குவியல்கள் பற்றியபடியோ

பரிசுக் கடையில்

பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்

புரட்டியபடியோ

நீ தொலைபேசிக் கொண்டிருக்கும்

குறுங்கண்ணாடிப் பேழைக்கு

நேர் எதிரே இருக்கும்

மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையிலோ

செர்ரி நிறப் பூக்கள் பூத்திருக்கும்

மேலாடை போர்த்தியபடி

எப்பொழுதும் பனிக்கட்டிகள் அதிகம்

கலந்து தருபவளின்

பழச்சாறு நிலையத்திலோ

வங்கியின் நீண்ட வரிசை

ஒன்றிலோ

அஞ்சலக சிகப்பு நிறப் பெட்டிக்குள்

உனது முகவரி கொண்ட கடிதத்தைச்

சேர்க்கத் தயங்கி

நின்று கொண்டிருக்கும் பொழுதோ

ஊரின் ஒரே நூலகத்தின்

தரைத்தளத்தில்

இடதுபுறத்தில் இருந்து

உனது பிரியமான சிறுகதை எழுத்தாளரின்

தொகுப்புகள் நிறைந்திருக்கும்

மூன்றாவது வரிசையின்

பின்மூலையில்

கொஞ்சமாய் வெளிச்சம் பரப்பியிருக்கும்

சாளரத்தை ஒட்டிய

புத்தக மேஜையிலோ

உனது மாலை வகுப்பொன்றின்

பின்னிருக்கையிலோ

ஒருவேளை நமது சந்திப்பு

நிகழாமலேயே கூட இருந்திருக்கலாம்

உனது பார்வைக் குவியத்தில்

நான் படாமலே போயிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களுக்கு

நிச்சயம்

என்னைத் தெரிந்திருக்கும்

நாமிருவரும்

அதே கணத்தில் அதே நிலத்தில்

இல்லாமலிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களில்

நானும் இருந்திருக்கிறேன்

******

இன்னும் இரண்டு நிமிடங்கள்

இருக்கின்றன

இன்றைய இரவிற்கான

பனி படற

அதற்குள் கேட்டு விடுகின்றேன்

உன்னிடம்

என் பாவ மன்னிப்பினை

உன் அந்தரங்கம் உதிர்த்த

சருகுப் பூக்களை

எனது கனவுப் புத்தகத்திற்குள்

நீ அறியாவண்ணம்

பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்காக 

உனது வசந்தத்தின் நிறங்களில்

கொஞ்சத்தை

எனது கவிதைகளுக்கெனத் 

திருடிக் கொண்டதற்காக

நமது படுக்கையறைகளைப்

பகிர்ந்துள்ளது

ஒரே சுவர்தான் என்பதை

நான் மட்டுமே

அறிந்து வைத்திருப்பதற்காக

சமயங்களில்

உன் கருணையின் தானியங்கள்

பொருக்க வரும் சிட்டுகுருவிகள்

ஜன்னல் மாற்றி நுழைந்து

என் அறையின் நிச்சலனம் கண்டு

அலறி ஓடியதற்காக

உதிர்க்க முடியாத

ஒரு வழுவிழந்த சிறகைப் போல

உன் நினைவின் ஓரத்தில்

இன்னமும்

ஒட்டிக் கொண்டிருப்பதற்காக

***

இன்னும் ஒரு நிமிடம் தான்

இருக்கிறது

உன் பாடல் ஒலிபரப்பப் பட

அதற்குள் இன்னுமொருமுறை

நிரப்பிக் கொள்கிறேன்

என் கோப்பையினை

நான் விரும்புவதாலும்

நீ விரும்பாவிட்டாலும்

ஒரே கூரையின் கீழ்தான்

நாமிருவரும்

இரவுக்கு ஒளிய வேண்டியிருக்கிறது

எழுதப்படாத நம் மௌன ஒப்பந்தப்படி

நமக்கிடையே வளர்ந்திருக்கும் சுவரில்

கரம் வைக்கிறேன்

நீ அனுமதித்தால்

அதன் வேர்கள்

உன் படுக்கை அறை வரை

நீளட்டும்

ப்ரியம் இருந்தால்

பற்றிக் கொள்

சொல்லப்படாத அன்பினைப் போலவே

துடைக்கப்படாத கண்ணீருக்கும் தான்

என்ன பயன்.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

யௌவனத்தில் நடுங்கும் இரவு

17 Monday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

காதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

மூன்றாம் ஜாமம் முடிவதற்கு

சற்றுமுன்பு

என் இரவினில் இறங்குகிறாய்

சலனமில்லாத் தெப்பம் போல்

என்னைப் புதைத்திருக்கும் இருளுள்

உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய்

முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய்

ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும்

அறையின் ஏகாந்தத்தை

உன் ஒற்றைச் சிரிப்பில்

ஊதி அணைக்கிறாய்

கூரையிலிருந்து

பெரு மழையாய் பொழிகின்றன

பனியில் உறைந்த உனது செதில்கள்

ஆயிரம் தலைகளுடன்

சுவர் மொத்தமும் நெளிகின்றது

உனது நிழல்

ஆலகாலம் போல்

காற்றை நிறைக்கிறது

உனது சுவாசம்

உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று

இந்த இரவிற்கென

என்னை ஆயத்தப்படுத்துகிறது

எனது முதல் துளிக் கண்ணீரை

நா நீட்டிச் சுவைக்கிறாய்


மரணத்தின் வேட்கை போல்

எவ்வளவு உறிஞ்சியும்

தீரவேயில்லை உன் தாகம்

உனது யௌவனத்தில்

நடுங்கும் என் இரவு

உன்னை ஆயாசமடையச் செய்கிறது

அருகே படர்கிறாய்

உனது ஆலிங்கனத்தில்

பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின்

படபடப்பு

பற்றி எரிகிறது படுக்கை

உறைபனி விரல்களால்

மார்பினை வருடிக்

கண்களை மூடச் செய்கிறாய்

காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும்

நூற்றாண்டுகளின் தனிமையினையும்

என் காதோரமாய் சபிக்கிறாய்

பின்

உனது பற்களை அழுத்தி

என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சின்னஞ் சிறிய உலகம்

14 Friday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, kavithaigal, Love poems, tamil Kavithaigal, tamil poem

 

கோடி யுகங்களுக்கு முன்

ஒரு பேருந்து நிலையத்தில்

உன்னைச் சந்தித்திருந்த பதினைந்தாம் நிமிடத்தில்

அனுப்பியிருந்தாய் முதல் குறுஞ்செய்தியை

பார்த்ததில் மகிழ்ச்சி என்றாய்

சிறிய உலகம் என்றாய்

நான்கு தெருக்கள் தள்ளி இருந்தும்

இத்தனை நாட்களாய் சந்திக்கவேயில்லையே

என ஆச்சர்யம் கொண்டாய்

எந்தத் தெரு என நீயும் சொல்லவில்லை

நானும் கேட்கவில்லை

அலைபேசி எண் வாங்கினாய்

தந்தாய்

அடிக்கடி பேசுவோம் என்றாய்

நீயும் அழைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை

நீ பேருந்தில் ஏறிச்சென்ற பின்பும்

அங்கேயே நின்று கொண்டிருந்தேன்

நீ கூறிய சிறிய உலகத்தில் 

அதே பேருந்து நிலையத்தில்

எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

இன்னுமொரு யுகம் தாண்டி

அதேபோல் தற்செயலாய்

இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது

கலங்கரைவிளக்க வணிக வளாகத்தின்

இசைக்கோப்புகளும் பொம்மைகளும்

வாழ்த்து அட்டைகளும் வாசனைகளும்

நிறைந்திருக்கும் கடையொன்றின் புத்தகப் பிரிவில்

மறுபடியும் சிறிய உலகமென்றாய்

இந்தப் புத்தகக்கடை

ஊரிலேயே ப்ரியமான இடமென்றாய்

வெகு நாட்களாய் நீ தேடிக் கொண்டிருந்த புத்தகம்

என் கையில் இருக்க

ஆச்சர்யம் கொண்டாய்

நீ கூறிய சிறிய உலகத்தில்

இந்த ஊரிலேயே

உன் ப்ரியத்துக்குகந்த புத்தகக் கடையில்

இதே புத்தகத்தை

எத்தனை முறை கைகளில் வைத்துக் கொண்டு

நின்றிருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

என்னிடமிருந்து அந்தப் புத்தகத்தை

இரவல் வாங்கிக் கொண்டாய்

நான்காவது மாடியின் உணவகம் ஒன்றில்

சுமாரான தேநீர் அருந்தினோம்

பர்கர் கடையின் முன்பு

கான்க்ரீட் கோமாளி அமர்ந்திருந்த இருக்கையில்

அருகருகே அமர்ந்து கொண்டோம்

அவனுடன் புகைப்படம் எடுத்துத்தரச் சொன்னாய்

வார்த்தைகள் தீர்ந்துபோயின

நகரும் ஏணிப்படிகள் வேகமாக இறங்கின

மின்சார ரயில் நிலையத்திற்கு தூரம்

குறைவாக இருந்தது

சரியான நேரத்திற்கு ரயிலும் வந்தது

அடுத்தமுறை சந்திக்கையில்

புத்தகத்தைத் திரும்பத் தருவதாய்

குறுஞ்செய்தி அனுப்பினாய்

நீயும் தரவில்லை

நானும் கேட்கவில்லை

அந்த சுமாரான சுவை கொண்ட தேநீர்

இன்னுமொருமுறை கிடைக்கவேயில்லை

நான் அருகே அமர்கையில்

கோமாளி ஒருபோதும் சிரிக்கவேயில்லை

மின்சார ரயில் கம்பி பற்றி

கையசைத்துச் செல்லும் எல்லாரிடமும்

உனது சாயல் தேடித் தோற்றிருந்த ஒரு நாளில்

காலம் என்னை

உனது சிறிய உலகத்தில் இருந்து

நாடு கடத்த முடிவு செய்திருந்தது

எத்தனை யுகங்கள் தாண்டியும்

இனி நிகழாது நம் சந்திப்பு

கடல்தாண்டிக் காத்திருக்க

ஒருவேளை நீ வரக்கூடும்

என்றொரு இடமுமில்லை

இல்லாத ஒன்றை எப்படி

இழக்கக்கூடும்

உனக்கென முதலும் முடிவுமான 

குறுஞ்செய்தி அனுப்பி

கிளம்பும் விமானத்தைப் பழி சொல்லி

அணைத்து வைத்தேன் அலைபேசியை

இரவும் பகலும்

நிலமும் கடலும்

கடந்த

நீண்ட பயணம் அது

தரை இறங்கியதும்

உயிர் வந்த அலைபேசி

உன் மூன்றாவது குறுஞ்செய்தியை

படிக்கிறாயா என்றது

பதிலை எதிர்பாரா கேளிவியின் பதிலை

எதிர்கொள்ளத் திராணியின்றி

மீண்டும் அணைத்தேன்

பனியும் கனவும்

கண்ணீரும் புன்னகையும்

கடந்த

மூன்று தினங்களுக்குப் பின்

குறுஞ்செய்தியைத் திறந்தேன்

கடித உறை மட்டுமே இருக்க

உனது செய்தி

வரும் வழியில் எங்கோ

அலைக்கற்றைகளில் கரைந்திருந்தது

என்ன அனுப்பியிருந்தாய்

அந்தக் குறுஞ்செய்தியில் ?

மீண்டும் நீ சொல்லப்போவதுமில்லை

நான் கேட்கப் போவதுமில்லை

கடிதங்களில் காதலித்தவர்கள்

பாக்யவான்கள்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சிகப்பு நிற மேப்பிள் வயலின்

13 Thursday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 1 Comment

Tags

கவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

 

உனது பாடல்

இன்றும் நன்றாக இருந்தது

உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்

இரண்டாவது பின்வரிசை

வலதுபுறக் கடைசியில்

உனது பாடலுக்கு

வயலின் வாசிப்பவன் நான்

ஒரேயொரு முறை

என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்

எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்

அழகாய் இருப்பதாகச் சொன்னாய்

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்

வசந்தத்தின் உச்சத்தில் மாலை

தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்

வயலினுக்காய் வீணாக வேண்டாம்

கைகள் கோர்த்து நடக்கலாம் வா

எனச் சொல்லியிருந்திருக்கலாம்

கடற்கரை ஒட்டிய

மாலுமிகள் உணவகத்தில்

ஒயின் பருகியிருந்திருக்கலாம்

அங்கிருக்கும் நடனமேடையில்

கால்கள் வலிக்க

ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்

படகுத்துறை பாலத்தில்

மஞ்சள் விளக்கொன்றின் கீழ்

உனக்காக எழுதிய பாடல்களை

படித்துக் காட்டியிருந்திருக்கலாம்

அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்

ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்

மாறாக நான் ஒரு கனவானைப் போல்

நடந்து கொண்டேன்

கண்டிப்பாக பிறிதொருமுறை

வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்

புன்னகைத்தேன்

பின் ஒருபோதும் நாம்

பேசிக்கொள்ளவயில்லை

நீ உன் பாடலும்

நான் என் வயலினுமாய்

இசை மட்டுமே நமக்கான

பேசு மொழியாயிருந்தது

ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்

உதிர்ந்து கொண்டேதானிருந்தன

யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்

யார் யாரோ ஒயின் பருகினர்

யார் யாரோ நடனமாடினர்

யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்

வயலினை உடைத்திருந்தேன் நான்

இதே போல நேற்றைய இரவினில்

அடுத்த கோடை விடுமுறையில்

மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி

வராமலேயே போன

எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்

அதற்கும் முந்தைய இரவுகளில்

பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு

நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்

திரையரங்கமொன்றில்

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்

இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்

வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்

இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்

இன்னபிறவாகவும் இருந்தாய்

எல்லா இரவுகளிலும்

ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத

கனவானாகவே இருந்தேன்

கார்காலம் ஒரு பேயைப் போல

நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது

துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்

ஆயத்த ஒலி கேட்கிறது

புறாக்கள் சுவர் பொந்துகளில்

பதுங்கத் துவங்கியிருக்கின்றன

சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு

இந்த நகரத்தில்

ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்

நான்

ஒரு காலி மதுக்கோப்பை

இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை

கண்ணாடி மீன் தொட்டி

உன்னுடன் இருந்த பொழுது

என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்

ஏன் இப்பொழுது மட்டும்

அறை மொத்தமும்

ஏன் இந்த இரவு

தவறவிட்ட தருணங்களையும்

அது குறித்தான கற்பனைகளையும்

என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே

பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது

***    

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • மழையும் மழை சார்ந்த கதைகளும் - 1
  • வாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்
  • ஊஞ்சல்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: