
உனது பாடல்
இன்றும் நன்றாக இருந்தது
உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்
இரண்டாவது பின்வரிசை
வலதுபுறக் கடைசியில்
உனது பாடலுக்கு
வயலின் வாசிப்பவன் நான்
ஒரேயொரு முறை
என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்
எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்
அழகாய் இருப்பதாகச் சொன்னாய்
கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்
வசந்தத்தின் உச்சத்தில் மாலை
தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்
வயலினுக்காய் வீணாக வேண்டாம்
கைகள் கோர்த்து நடக்கலாம் வா
எனச் சொல்லியிருந்திருக்கலாம்
கடற்கரை ஒட்டிய
மாலுமிகள் உணவகத்தில்
ஒயின் பருகியிருந்திருக்கலாம்
அங்கிருக்கும் நடனமேடையில்
கால்கள் வலிக்க
ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்
படகுத்துறை பாலத்தில்
மஞ்சள் விளக்கொன்றின் கீழ்
உனக்காக எழுதிய பாடல்களை
படித்துக் காட்டியிருந்திருக்கலாம்
அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்
ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்
மாறாக நான் ஒரு கனவானைப் போல்
நடந்து கொண்டேன்
கண்டிப்பாக பிறிதொருமுறை
வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்
புன்னகைத்தேன்
பின் ஒருபோதும் நாம்
பேசிக்கொள்ளவயில்லை
நீ உன் பாடலும்
நான் என் வயலினுமாய்
இசை மட்டுமே நமக்கான
பேசு மொழியாயிருந்தது
ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்
உதிர்ந்து கொண்டேதானிருந்தன
யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்
யார் யாரோ ஒயின் பருகினர்
யார் யாரோ நடனமாடினர்
யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்
வயலினை உடைத்திருந்தேன் நான்
இதே போல நேற்றைய இரவினில்
அடுத்த கோடை விடுமுறையில்
மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி
வராமலேயே போன
எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்
அதற்கும் முந்தைய இரவுகளில்
பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு
நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்
திரையரங்கமொன்றில்
பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்
இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்
வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்
இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்
இன்னபிறவாகவும் இருந்தாய்
எல்லா இரவுகளிலும்
ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத
கனவானாகவே இருந்தேன்
கார்காலம் ஒரு பேயைப் போல
நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது
துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்
ஆயத்த ஒலி கேட்கிறது
புறாக்கள் சுவர் பொந்துகளில்
பதுங்கத் துவங்கியிருக்கின்றன
சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு
இந்த நகரத்தில்
ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்
நான்
ஒரு காலி மதுக்கோப்பை
இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை
கண்ணாடி மீன் தொட்டி
உன்னுடன் இருந்த பொழுது
என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்
ஏன் இப்பொழுது மட்டும்
அறை மொத்தமும்
ஏன் இந்த இரவு
தவறவிட்ட தருணங்களையும்
அது குறித்தான கற்பனைகளையும்
என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே
பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது
***
Like this:
Like Loading...

நீ வருவதாய் சொன்ன
வாசலின் முன்பு தான்
நின்று கொண்டிருக்கிறேன்
வந்திருப்பது ஏன் என்று
உனக்கும் புரியும்
நீ வரச்சொன்ன காரணமும்
எனக்குத் தெரியும்
இன்னும் எத்தனை காலம்
இதே விளையாட்டு
நான் தட்டப்போவதும் இல்லை
நீ தாழ்பாள் இடவும் இல்லை
பின்னே எதற்கிந்தக் கதவு
நீ வரச்சொல்வதும்
நான் வந்து நிற்பதும்
நீ தள்ளிச் செல்வதும்
நான் தயங்கி நிற்பதும்
நீ மறுத்துப் போவதும்
நான் மரத்துப் போவதும்
மீண்டும்
நீ வரச்சொல்வதும்
நான் வந்து நிற்பதும்
கண்ணீரும் கவிதையும்
வார்த்தை மாறாமல்
நடப்பது தானே
ஏற்கனவே படித்த புத்தகம்
எத்தனை முறை புரட்டினாலும்
மாறியா போய்விடும்
கடைசி வரி
நான் வேறு புத்தகத்தைத்
தொடப்போவதுமில்லை
நீ இந்தப் புத்தகத்திற்குள்
வரப்போவதுமில்லை
பின்னே எதற்காக எழுதப்பட்டது
நமது கதை
இந்தக் கோட்டையின் உச்சியில்
உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும்
வேறில்லை என்பது
நான் மட்டுமே அறிந்த ரகசியம்
இத்தனைக்கும் பிறகு
உன் கூந்தல் ஏணி
கீழே வரக் காத்திருக்கக்
காரணம் ஒன்று தான்
நம் முதல் முத்தத்தைப்
பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு
நமக்குத் தரப்படவேயில்லை
பின் எப்படித் தீரும்
நம் சாபம்
***
Like this:
Like Loading...

நத்தையின் கூடு போல்
சுருண்டு கிடக்கிறது உன் வனம்
மீளமுடியா சாபம் போல்
நீண்டு நெளிந்து உன் பாதைகள்
கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே
கண்களைக் குருடாக்குகின்றன
உன் நட்சத்திரப் பூக்கள்
நாணல்கள் விம்மித் தணியும் சத்தம்
நடுங்கச் செய்கிறது
ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும்
பறவைகளின் ஆலாபனைகள்
உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன
எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய்
என் யட்சி
சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன
உன் ரகசியங்களின் சாவியை
தூரத்துப் பாறை ஒன்று
சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல
காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன
வழியெங்கும் உன் வாசம் போர்த்தி
தேடித் திரிந்து தேகம் துவண்டு
உன்னிடமே யாசிக்கிறேன்
உன் கருணையின் ஊற்றினை
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்
என் யட்சி
தேனீக்கள் போலத் துளைக்கிறது
இந்தப் பனி
உனது ஆயிரம் நாவினால்
தீண்டு
பற்றி எரியட்டும்
இந்தக் காடு
***
Like this:
Like Loading...

எப்படி இருந்தது உன் குரல்
அந்த மழையும்
அமர்ந்திருந்த மரமும்
அழகாய் இருந்த நீயும் மட்டுமே
நினைவிருக்கிறது
என்ன பேசிக் கொண்டிருந்தோம்
பேசிக் கொண்டிருந்தோம்
அது நினைவிருக்கிறது
ஈர நெற்றியும் நடுங்கிய உதடுகளும்
அடர்ந்த கண்களும் குளிர்ந்த சுவாசமும்
கைவிரல் மோதிரமும் அதன் கீறலொன்றும்
நினைவிருக்கிறது
வாசனை நினைவிருக்கிறது
அல்லது அப்படி நம்பிக் கொண்டிருக்கிறேன்
வாசனை திரவியத்தின் பெயரை
இன்னொருமுறை கேட்டிருக்கலாமோ
உனது கையெழுத்து மட்டுமே
எஞ்சிவிட்டிருக்கிறது
உள்ளங்கைச்சூட்டைத்
தொலைத்துவிட்டிருக்கிறோம் இருவரும்
எனது மூளைத் தரவுகளைத்
திருடிவிட்டிருக்கும் செயலி ஒன்று
இவளைத் தெரியுமா என
உன் சமீபத்திய புகைப்படத்தை
நீட்டிக் கேட்கிறது
புகைப்படத்தில் இருக்கும் நீ
வேறு யாரோ போல் இருக்கிறாய்
உனது கண்கள்
நான் பழக்கிய மீன்குட்டிகள் அல்ல
இந்தப் புன்னகை
உன் உதடுகளுக்கு ஒட்டவேயில்லை
உனது புத்தக விருப்பப் பட்டியலையும்
பிடித்த இசைத் தொகுப்புகளையும் பார்த்து
இவள் வேறு யாரோ என அலறி
செயலியைத் துண்டிக்கிறேன்
இனி ஒருபோதும்
இந்த உன்னைச் சந்திக்க விருப்பமில்லை
என் நினைவில் இருக்கும் நீயே
நீயாக இருந்துவிட்டுப் போ
***
Like this:
Like Loading...

எனக்கு பிடித்த பாடல்கள்
இனி உன்னுடையதல்ல
எதற்காக இன்னும்
என் சொற்களின் மேலேறி
பவனி வருகிறாய்
எனது இரவுகள் உனக்கானதில்லை
எதை நினைவுபடுத்த
மீண்டுமென் கதவு தட்டுகிறாய்
நம் கடைசிச் சந்திப்பில்
நீ அருந்திய
தேனீர் கோப்பையின் அடியில்
காய்ந்து போய் கிடக்கின்றன
உன் உதடுகள்
எல்லா பேருந்து ஜன்னல்களிலும்
இன்னமும் நீ
நீ என்பது
நீ மட்டுமல்ல
உன் நினைவுகளும் தான்
உன் நினைவுகளென்பது
நினைவுகள் மட்டும் தான்
நீ அல்ல
***
Like this:
Like Loading...
<span>%d</span> bloggers like this: