பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Category Archives: கவிதை

கவிதை

நினைவில் வாழும் மீன்கள்

10 Monday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

தமிழ் கவிதைகள், poems, tamil Kavithaigal, tamil poem

fish1

எப்படி இருந்தது உன் குரல்

அந்த மழையும்

அமர்ந்திருந்த மரமும்

அழகாய் இருந்த நீயும் மட்டுமே

நினைவிருக்கிறது

என்ன பேசிக் கொண்டிருந்தோம்

பேசிக் கொண்டிருந்தோம்

அது நினைவிருக்கிறது

ஈர நெற்றியும் நடுங்கிய உதடுகளும்

அடர்ந்த கண்களும் குளிர்ந்த சுவாசமும்

கைவிரல் மோதிரமும் அதன் கீறலொன்றும்

நினைவிருக்கிறது

வாசனை நினைவிருக்கிறது

அல்லது அப்படி நம்பிக் கொண்டிருக்கிறேன்

வாசனை திரவியத்தின் பெயரை

இன்னொருமுறை கேட்டிருக்கலாமோ

உனது கையெழுத்து மட்டுமே

எஞ்சிவிட்டிருக்கிறது

உள்ளங்கைச்சூட்டைத்

தொலைத்துவிட்டிருக்கிறோம் இருவரும்

எனது மூளைத் தரவுகளைத்

திருடிவிட்டிருக்கும் செயலி ஒன்று

இவளைத் தெரியுமா என

உன் சமீபத்திய புகைப்படத்தை

நீட்டிக் கேட்கிறது

புகைப்படத்தில் இருக்கும் நீ

வேறு யாரோ போல் இருக்கிறாய்

உனது கண்கள்

நான் பழக்கிய மீன்குட்டிகள் அல்ல

இந்தப் புன்னகை

உன் உதடுகளுக்கு ஒட்டவேயில்லை

உனது புத்தக விருப்பப் பட்டியலையும்

பிடித்த இசைத் தொகுப்புகளையும் பார்த்து

இவள் வேறு யாரோ என அலறி

செயலியைத் துண்டிக்கிறேன்

இனி ஒருபோதும்

இந்த உன்னைச் சந்திக்க விருப்பமில்லை

என் நினைவில் இருக்கும் நீயே

நீயாக இருந்துவிட்டுப் போ

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

கடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை

09 Sunday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poems, tamil poem

Teacup1-1

எனக்கு பிடித்த பாடல்கள்

இனி உன்னுடையதல்ல

எதற்காக இன்னும்

என் சொற்களின் மேலேறி

பவனி வருகிறாய்

எனது இரவுகள் உனக்கானதில்லை

எதை நினைவுபடுத்த

மீண்டுமென் கதவு தட்டுகிறாய்

நம் கடைசிச் சந்திப்பில்

நீ அருந்திய

தேனீர் கோப்பையின் அடியில்

காய்ந்து போய் கிடக்கின்றன

உன் உதடுகள்

எல்லா பேருந்து ஜன்னல்களிலும்

இன்னமும் நீ

நீ என்பது

நீ மட்டுமல்ல

உன் நினைவுகளும் தான்

உன் நினைவுகளென்பது

நினைவுகள் மட்டும் தான்

நீ அல்ல

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

ஜன்னல் பூனைகள்

08 Saturday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 2 Comments

Tags

கவிதை, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

 

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்

 

பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்

 

யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம்

வா

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்

 

மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து

ஊதித் தீ மூட்டுவோம்

 

அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்

 

சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

 

***

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

நினைவில் இருக்கும் முத்தம்

04 Tuesday Apr 2017

Posted by rejovasan in கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, tamil Kavithaigal, tamil poem

நினைவில் இருக்கும்
அந்த ஒரே ஒரு முத்தத்தினை
இன்னமும் வருடிக்கொண்டிருக்கிறது மனது
புன்னகை தருகிறது
என் கன்னத்தில் உன் தடுகள்
முளைத்த அந்த இரவு

லேசான நெருப்பு விட்டு விட்டுத் துடித்து
நீ ஊதி உதடுகள் எடுத்ததும்
தேகம் மொத்தமும் பரவியது
நேற்று போலிருக்கிறது

கழுத்திலிருந்து எகிறி குதித்து
உன் உதடுகளோடே
ஒட்டிக் கொண்டோடிவிட
எவ்வளவு முயன்றதென் தலை தெரியுமா

உன் கண்கள் சந்திக்க முடிந்திருந்த
அந்த சிறு வினாடிகளில் இருந்தே
இறகு தொட்டெழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்

அந்த இரவினை மீண்டும் எதிர்பார்த்தே
இறங்க எத்தனிக்கிறேன் என் எல்லா
நாளைகளுக்குள்ளும்

உன் ஸ்பரிசத்தின் குளிர்ச்சி
இன்னமும் உறையவைத்திருக்கிறது
எனக்குள் என்னை

அடுத்தமுறை உன்னைச் சந்திக்கையில்
அதேபோல் இல்லாவிட்டாலும்
அதில் துளியாவது தொட்டுக் கொண்டு
உன் கன்னங்கள் நனைப்பேன்

புன்னகைப்பதை நிறுத்திவிட்டு
இப்பொழுது போய் உறங்கு

காத்திருக்கின்றன முத்தங்கள் சுமந்து கொண்டு
ஆயிரம் கனவுகள்.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

இதுவும் …

25 Saturday Feb 2017

Posted by rejovasan in கவிதை

≈ 1 Comment

ithuvum

உன் நினைவாக வைத்திருக்கும்
புத்தகமொன்றின்
பழுப்பேறிய பக்கமொன்றிலிருந்து
விரல் தொட்டது
என்றோ நீ சூடி
தொலைத்த பூ ஒன்று …

இடைப்பட்ட நாளொன்றின்
நடுச்சாமத்தில்
தப்பியோடிவிட்டிருக்கிறது
உன் வாசனை …

எவ்வளவு வருடியும்
மீட்டெடுக்க முடியவில்லை
உன் ஸ்பரிசத்தை…

“காலம் கடந்து விட்டதா
இருவருக்கும்”
என்றேன்.

“அல்லது காலத்தை நாம்
கடந்திருக்கலாம்”
என்றபடி
காற்றில் கரையத் தொடங்கியது.

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 139 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • யௌவனத்தில் நடுங்கும் இரவு
  • சின்னஞ் சிறிய உலகம்
  • சிகப்பு நிற மேப்பிள் வயலின்
  • டிராகன் இளவரசி
  • பறவைகளின் ஆலாபனை

Top Posts

  • டிராகன் இளவரசி

Create a website or blog at WordPress.com

Cancel
%d bloggers like this: