பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Category Archives: கடிதங்கள்

Love letters

முகவரி தொலைத்த கடிதங்கள் # 10

06 Tuesday Jul 2010

Posted by rejovasan in கடிதங்கள்

≈ 10 Comments

Tags

love letter

காதல் தேவதை

 

அது ஒரு காலம். கைகளில் கவிதைகளோ கண்களில் காதலோ இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். எப்படியாவது காதல் தேவதையைச் சந்தித்து ஒரு காதலியை யாசித்து விடும் கனவு மட்டுமே இருந்தது.

 

காதலைத் தேடி நான் வெளியே சென்றுவிட்டிருந்த ஒருநாளின் மாலையில் காதல் தேவதை என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்திருக்கிறாள். எதற்காக என்று தெரியவில்லை கொஞ்ச நேரம் காத்து கூட இருந்திருக்கிறாள். நெடு நேரம் பூட்டிய கதவும், சாவி பிரிந்து மௌனித்திருந்த பூட்டும் அவளுக்குச் சலிப்பைத் தந்திருக்கக் கூடும். மாலை மட்டும் பூக்கும் அந்தப் பூவைக் கிள்ளி நொடியில் உன்னைச் செய்து விட்டு, தான் வந்து போனதன் அடையாளமாய் வாசலில் உன்னையும், வானத்தில் நிலவையும் நிறுத்திப் போயிருந்திருகிறாள்.

 

காதல் தேவதையே கவனித்திருந்திருக்கமட்டாள் வானத்திலும் வாசலிலும் ஒரே அடையாளத்தை விட்டுப் போயிருப்பதை. என் வாசல் வானமாகிவிட்டதா இல்லை வானம் என் வாசலுக்கு வந்துவிட்டதா எனக் குழம்பிப் போய் தான் முதலில் உன்னைப் பார்த்தேன் நான். எனக்கான முதல் கவிதையைச் சந்தித்தது கூட அன்று தான்.

 

மீட்டப்படாத இசைக் குறிப்புகள், சந்தித்துப் பழக்கமில்லை எனக்கு. உன் ஒவ்வொரு அசைவிலும் காற்றில் எழுதப் பட்டுக் கொண்டிருந்த புதிய இசைக் குறிப்புகள் தொல்லை செய்துகொண்டே குழப்பவும் செய்தன என்னை. இருந்தும் பார்த்ததுமே பிடித்துப் போன உன்னை என்ன செய்வதென்று மட்டும் புரியவில்லை.

 

காதல் செய்தேன்.

 

காதல் தேவதை வந்து போன கதையைச் சொன்னாய். அதில் நான் தாமதமாய் வந்ததற்காய் மகிழ்வதற்கான காரணங்கள் நிறைய இருந்தது. ஏன் காதல் தேவதையைக் காக்க வைத்தாய் எனக் கேட்டாய் ? ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ? ஏன் கூடாதென நீ கேள்வி கேட்ட தொனியின் அழகிற்காகவே பதில் சொல்லத் துணிந்தேன்.

 

உன் ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடமும், சென்று முடியும் முகவரியும் புன்னகையாகவே இருக்க வேறென்ன செய்வது நான், சத்தமில்லாமல் ரகசியமாய் ,அவற்றைச் சேகரித்து வைப்பதைத் தவிர.

 

எப்படி உன்னை என் எல்லாம் என்று முடிவு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இன்றும் என்னிடம் இல்லை. எல்லாமாகவும் தோன்றினாய். எதுவும் இல்லாத ஒன்றாகவும் இருந்தாய். எனினும் எப்பொழுதும் உன்னுடனிருக்க மனம் ப்ரியப்பட்டது.

 

இடியோடு கூடிய மழையோடு முத்தமொன்றையும் நாம் பரிமாறிக் கொண்ட அந்த இரவின் அடுத்த நாளில் தான் நீ காணாமல் போயிருந்தாய். காதல் தேவதை திரும்பி வந்திருந்தாள்.

 

உன்னைப் பற்றிக் கேட்டதற்கு, தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு என்றாள். அவளிடம் எப்படிச் சொல்ல நீ தான் எனது அடையாளம் என்பதை.

 

எதற்காக என்னைத் தேடிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு ஓயாமல் பேசியபடி இருக்கும் காதல் தேவதையிடம், அவளைப் போய் விடச் சொல்லி விட்டு, சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்ட உன்னை இரண்டு அறைகள் தந்து உடனே அனுப்புமாறு கேட்கும் வார்த்தைகள் இதயத்திற்கும் உதடுகளுக்கும் இடையே உழன்று கொண்டிருக்கின்றன.

—————————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

முகவரி தொலைத்த கடிதங்கள் # 9

25 Friday Jun 2010

Posted by rejovasan in கடிதங்கள்

≈ 8 Comments

Tags

love letter

இரவினைக் கொல் …

 

வார்த்தைகள் எல்லாம் சிதறிப் போய் , உள்ளிருந்து உடைத்துக் கொண்டு , கண்கள் கிழிந்து போகும் படி கண்ணீர் பீரிட்டு வருகையில் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவது?  இருந்தும் இந்த இரவில் உனக்குக் கடிதம் எழுதித் தான் ஆக வேண்டும்.

வெளிர் நீல வானத்தில் மறைந்து கொள்ள மேகமில்லாமல் நிலா அழுவதைப் பார்த்து விட்ட பிறகு  , என் பெயர் எழுதிய நட்சத்திரமொன்று வெடித்துச் சிதறி விண்ணில் சரிவதை நேர் கொண்டு விட்ட பிறகு , தனியே ஒரு பறவை உறக்கம் கொள்ளாது அகாலத்தில் ஓலமிட்டபடி பாதை தெரியாமல் தவித்துப் பறப்பதற்கு சாட்சியாகி விட்ட பிறகு எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நீ கடைசியாய் எனக்கு இட்டுத் தந்த கையொப்பம் என் விரல்களில் ஏறி விளையாடியபடி இருக்கிறது. இன்னொரு புறம் புகைப்படத்திலிருந்து இறங்கிவந்து விடும்படி இறைஞ்சிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய். போதுமென கண்கள் பொத்திக் கொண்டு வீடு தாண்டி ஓடி வந்தால், இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா , பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும் சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா என நினைக்கச் சொல்லுகிறது. எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நாளையும் இதே போல ஒரு இரவும் நிலவும் உண்டு எனத் தெரிந்து விட்ட பிறகும் எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

வேண்டுமானால் எழுதிய கடிதங்கள் அத்தனையும் கிழித்தெறியத் தயார். ஒன்று மட்டும் செய். எப்படியாவது எனக்கான இரவுகளைக் கொன்று விட வழி சொல். நீ இல்லாமல் வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?

 

———————————————————————–

 

 

 

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

முகவரி தொலைத்த கடிதங்கள் # 8

23 Wednesday Jun 2010

Posted by rejovasan in கடிதங்கள்

≈ 5 Comments

Tags

love letter

அம்மாவும் நீயும் …

 

 

 

உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். எப்பொழுதும் உன் பெயரைச் சரிகமபதநி எனச் சங்கீதமாய் சுரம் பிரித்துச் சொல்வதிலிருந்து தொடங்கும் அது. கூடவே உன் பெயரோடு என் பெயரை இணைத்துச் சொல்லுவாள் அவள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு. என் கவிதைகள் எப்பொழுதுமே அவளுக்குக் கேலிப்பொருட்கள்.

 

உன் கண்கள் பற்றிச் சொல்ல வாளும், வேலும், மீனும் போதுமா என்பாள். உன் முகம் பற்றிப் பேச நிலா தாண்டி போகமாட்டாயா என சொல்லிச் சிரிப்பாள். எப்பொழுதும் தொங்கும் காதணி , சிரிக்கும் கொலுசுகள் ஏன் எனக் கேட்பாள். எனக்குப் போட்டியாய் உன் பின்னே சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளைப் பிழைத்துப் போகும்படி விட்டு விடச் சிபாரிசு செய்வாள்.

 

என் கவிதைகள் எதுவுமே தன்னைப் போலில்லாத பொழுது , நான் எப்பொழுதும் உன்னை அவள் போலவே இருப்பதாகச் சொல்லுவது ஏன் எனக் கேட்டு நகைப்பாள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.

 

அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.

 

அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?

 

———————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

முகவரி தொலைத்த கடிதங்கள் # 7

16 Wednesday Jun 2010

Posted by rejovasan in கடிதங்கள்

≈ 5 Comments

Tags

love letter

கனவும் மழையும், ஒருவேளை நீயும் … ?

 

 

 

கனவு பற்றியோ , மழை பற்றியோ இல்லை உன்னைப் பற்றியோ  மீண்டும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் . எப்படி வருடும் கனவும்,  வருத்தும் மழையும் என் கண்களிலேயே ஒட்டிப்போய் விட்டனவோ ,அது போலவே நீயும்.

 

ஆனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

இரவா பகலா , விழிப்பா மயக்கமா எனத் தெரியாத மீள முடியாத தருணமொன்றின் வெகு ஆழத்தில் மூழ்கிய நிலையில் நான். உன் பெயரின் ஓங்காரம் மட்டும் இசையெனப் பெய்துகொண்டிருந்த என் செவிக்குள் மழை மெல்ல ஒழுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி இருந்தேன். கடைசியாக வானவில் பார்த்தது என் நினைவில் இல்லை. மழையின் ஸ்பரிசம் கூட மறந்து தான் விட்டிருந்தேன். கடுங் கோடை மட்டுமே வெகுநாட்களாய் என்னைக் குடித்துக் கொண்டிருக்கையில் என்னை மறந்து போய் விட்டிருந்த மழையை எப்படி நம்ப முடியும் .

 

அதனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

உனக்கான கடிதங்களை மென்று மென்று விழுங்கி உடலின் ஏதோ ஒரு பகுதியில் , ஆலகால விஷமென பதுக்கிவிட்டிருந்த என் கண்களில் நீராய் தப்பியோடிக் கொண்டிருந்தன அவைகள். என் உயிர் வற்றிப் போய் பலநாட்களாகி இருக்கையில் எப்படி நம்புவது வழிவது வெறும் நீரென்று.

 

கண்களுக்கும் தெரியும் இதுவெறும் கனவென்று.

 

வெகு நாட்களாய் உனக்கென காத்திருந்து இற்றுப் போயிருந்த கதவில் , கேட்கும் வளையோசை உன்னுடையாதாக இருக்க வாய்ப்பில்லாத பொழுது , கதவு திறந்த என் முன் நிற்பது மட்டும் எப்படி நீயாக இருக்கமுடியும். வெகுநாட்களாய் நானே கூட உடனில்லாத நான் மட்டும் இருப்பது , சுற்றிலும் எதிரொலிக்கும் வெறுமைக்கும் தெரியும் என்பதால் , நீயில்லாத வீடென்று புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் சிலந்திகளுக்கும் தெரியும் ,இது கனவு மட்டுமேயென்று.

 

உடனிருக்கப் பிரியமின்றி கனவுகள் கூட பாதியில் சென்றுவிட்ட தருணத்தில் , இனியும் உறங்குவதில் அர்த்தமில்லையென விழித்திருந்தேன்.

 

வழக்கத்திற்கு மாறாக குளுமையை உணரமுடிந்தது என்னால். கண்கள் கூட சிவந்திருப்பதாய்த் தான் நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தது கண்ணாடி. கதவுகள்  கூடத் திறந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீதி முழுதும் நனைந்திருப்பதைக் கண்டேன். மழை பெய்து கொண்டிருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கேலி செய்வது போலிருந்தது , இரவு முழுதும் சேகரித்து வைத்திருந்த மழையை உதிர்த்துக் கொண்டிருந்த சிட்டுக் குருவியின் செய்கை.

 

கதவருகே உடைந்து சிதறியிருந்த கண்ணாடித் துண்டுகளைக் கண்ட தருணத்தில் தான் , மார்பில் அடித்தபடி சகதியாகிப் போயிருந்த தெருவின் வழி ஓடத் துவங்கினேன் உன் கால் தடங்களைத் தேடியபடி.

 

——————————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

முகவரி தொலைத்த கடிதங்கள் # 6

19 Tuesday Jan 2010

Posted by rejovasan in கடிதங்கள்

≈ 13 Comments

Tags

all about her, love letter

இன்னும் ஒரேமுறை …

 

 

கடிதத்தின் முதல் வரி கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தமாயிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சிதறும் வார்த்தைகள் நடுங்கியபடியே இருக்கின்றன நம்பிக்கையின்மையைப் பூசியபடி. மௌனமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. யாருடைய செவிகளும் எனக்குத் தேவையில்லை என உரத்துக் கத்தத் தோன்றுகிறது. ஆனால இருளில் புதைந்து கிடக்கும் கேள்விகளைக் காட்டிலும் , பகலில் நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கும் மௌனமே பயமேற்படுத்துவதாய் இருக்கிறது. உறக்கமின்றியும் கண்கள் மூடியிருக்கவே பிரியப்படுகிறேன், கனவில் ஸ்பரிசித்திருக்கும் உன் உள்ளங்கையின் வெம்மையை நிகழ்விற்கு எடுத்துவர முடியாது என நிச்சயமாய்ப் புரியும் வரை.

 

மார்பெலும்புகளின் குறுக்கே ஆயிரம் தசை நார்கள் பின்னிக்கொண்டு ஒத்திசைத்து அதிர்வது போல உள்ளே உன் பெயரே கேட்டுக் கொண்டிருக்கிறது , கட்டுப் படுத்தமுடியாமல். தொட்டியில் இருந்து எல்லாக் காலைகளிலும் ஆர்வமாய் எட்டிப் பார்க்கும் என் தோட்டத்து ரோஜா , மாலையில் தன் முள்ளெடுத்து தானே குத்திக் கொண்டு மடிந்து போகின்றது. முள்ளில்லாத நான் தொட்டிக்கு நீரூற்றியபடி அடுத்த பூவிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

 

ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்.

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: