பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: காதற் சிறப்புரைத்தல

பத்து இலக்க இடைவெளி

24 Friday Sep 2021

Posted by rejovasan in Uncategorized

≈ Leave a comment

Tags

காதற் சிறப்புரைத்தல, Love poems, poem, tamil Kavithaigal

Bendición del Oficial del Cielo

இத்தனைக்கும் பிறகு 

எவ்வளவு பிடிக்கும் என்று 

நானும் சொல்லவில்லை

அவளும் கேட்கவில்லை

இன்னமும் எழுதுகிறாயா 

எனக் கேட்டாள்

இன்னமும் நீ படிப்பதில்லை 

என்று மீண்டும் 

உறுதி செய்து கொண்டேன்

என்னிடம் எற்கனவே இருக்கும் 

அவளது எண்ணை 

அவள் சொல்லி 

மீண்டும் பதிந்து கொண்டேன்

பாதுகாக்கப்பட்ட அவளது 

முகப்புத்தகக் பிரதேசத்தில்

அனுமதித்துக் கொண்டாள்

கொஞ்ச நாள்

காலை வணக்கம் இனிய இரவு

அனுப்பலாம்

படித்ததில் பிடித்ததைப் 

பகிரமட்டுமே 

அவளது மின் சாளரப்பக்கம் வந்ததாக

பாசாங்கு செய்யலாம்

பதிலுக்கு மரியாதை நிமித்த 

மெய்நிகர் மஞ்சற் புன்னகைகள் 

கிடைக்கப் பெறலாம்

இனி ரகசியமாகப்  

பின் தொடரத் தேவையில்லை

அதைத் தவிர

வேறொன்றும் மாறவில்லை.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

31 Thursday Jan 2013

Posted by rejovasan in வெண்ணிற இரவுகள்

≈ 3 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Kathal Kavithaigal, kavithaigal, poems, tamil Kavithaigal

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

என்னைச் சந்திக்க கனவில் வராதே …

22 Tuesday May 2012

Posted by rejovasan in கவிதை

≈ 4 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, poem

 

மீண்டும் கனவுகள் ..

 

எறும்புகளைப் போலத்

தீராப்பசியுடன்

என் உணர்வுகளெங்கிலும்

ஊறித் திரிகிறாய்  ..

உறங்கியும் உறங்காத உன்மத்த நேரங்களில்

என்னைத் தின்கிறாய் .

எத்தனை முறை சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவில்

வராதே என்று.

 

எத்தனை முறை உன்னைத் துரத்துவது

இனியும் என்ன தான் செய்வது ..

இமைகளை மூடுகிறேன்

விழிகளுக்குள் இறங்கிடுகிறாய்

எங்கே ஒளிந்திருந்தாய் இத்தனை நேரமாய் ..

 

என்றோ பார்த்த புகைப்படத்தின் ஞாபத்திலா

தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலிலா

பேசிய வார்த்தைகளிலா

மௌனப் புன்னகையிலா

தலை மேல் சுற்றியழும் மின்விசிறியின் பின்னாலா

நாட்குறிப்பேடுகளின் மழுங்கிய பக்கங்களின்

மடங்கிய முனைகளிலா 

உன் நினைவுகளால் முழுவதும் துருவேறிப் போயிருக்கும்

என்னுள்ளா …

 

நீ தலைகோதுவதும்

தோள் சாய்வதும் 

மடி சேர்த்துக் கொள்வதும்

பேசிச் சிரிப்பதுவும்

மெதுவாய் பின் முறைப்பதுவும்

உதடுகளின் ஈரங்களும்

நிஜமாய் இருக்கின்றன

சில காயங்கள் புதிதாய் பிறக்கின்றன

சில நிதர்சனங்கள் மறக்கின்றன

சுடும் சுவாசமும் பிசுபிசுக்கும் கண்ணீரும்

அருகே .. மிக அருகே.

தொடர்பறுந்து வியர்த்தெழும் வேளைகளில்  எல்லாம்

‘வீல்’ என்று அழுகிறது மனது ..

 

எப்படிச் சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவுகளில்

வராதே என .

 

டிஸ்கி  1:-

யாரேனும் நா முத்துக்குமாரின்  “என்னைச் சந்திக்க கனவில் வராதே” புத்தகத்தை வாங்க விரும்பினால் …

டிஸ்கி 2 :-

மாப்பிள்ளை நான் தான் .. நான் போட்டிருக்க சட்டை மட்டும் தான் நா முத்துகுமாரோடது .

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் …

07 Tuesday Feb 2012

Posted by rejovasan in கவிதை

≈ 15 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, poems


 

எழுப்ப மறந்து உனக்காகக்

காத்துக் கொண்டிருக்கிறது அலாரம் ..

நீ விழிக்கையில் கூடவே

நடிக்கிறது அதுவும் …

 

நீ தினசரி படிக்கையில் மட்டுமே

தினசரி ஆகிறது

தினசரி.

 

நீ குளித்து முடிப்பதற்குள்

மூன்றாம் உலகப்போரை முடித்திருக்கின்றன

உன் ஆடைகள் ..

வெற்றி பெற்ற ஆடை க்ரீடதிற்குப் பதில்

சூடிக் கொள்கிறது உன்னை ..

 

கண்களை மூடி நீ பிரார்த்தனை செய்கையில்

உனக்குத் தெரியாமல்

பிரார்த்தனையைத் தொடங்கியிருக்கிறார்

கடவுள்

கடவுளின் கடவுளிடம் …

 

நீ பேருந்தில் படிப்பதற்காகவே

பிறப்பெடுத்திருக்கிறார்கள்

அகதா கிறிஸ்டிகளும் , ஸிட்னி ஷெல்டன்களும் ..

சமயங்களின் பயணச் சீட்டின் பின்னே

கவிதை எழுதும் நடத்துனர்களும் …

 

நீ வரும் வழி எங்கும்

வேண்டுமென்றே உனைக் காக்க வைக்கின்றன

போக்குவரத்து விளக்குகள் ..

போக்குவரத்து நெரிசல் மொத்தமும்

உன்னைப் பாடிக் கொண்டிருக்கையில்

பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறாய்

அலைபேசி எப்.எம் – இல்…

எல்லா வாகனங்களும் அபஸ்வரத்தில் கத்திவிட்டு

பெருமூச்சுடன் கிளம்புகின்றன ..

 

வெயிலடிக்கிறதெனக் குடை பிடிக்கிறாய் ..

சுற்றியிருப்பவர்களைச் சுட்டெரிக்கிறது

சூரியன் ..

 

நீ அலுவலகம் நுழைந்ததும்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை முளைக்கிறது ..

பக்கத்து இருக்கைக்கு மட்டும்

சிறகு முளைக்கிறது .

 

மின்னஞ்சல் அனுப்புகையிலும்

‘கோட்’டிட்டு நிரப்புகையிலும்

பேஸ் புக் படிக்கையிலும்

அரட்டைகள் அடிக்கையிலும்

பார்த்துக் கொண்டே இருக்கிறது ..

அதென்ன கணிப்பொறியா இல்லை

கண்ணாடியா …!

 

மதிய உணவைக் குறைத்து விட்டு

செல்லத் தொப்பையைக் காரணம் சொல்கிறாய்

பூக்கள் கனத்தது எப்பொழுதென

கோபத்தில் மீதம்.

 

மாலைத் தேநீர் உன் கைகளுக்குள்

தீரப் போகும் ஏக்கம்

தேநீருக்கும் மாலைக்கும் …

 

நீ அலுவலகம் விட்டுக் கிளம்புகையில்

எல்லா இருக்கைகளுக்கும்

தலை வெடிக்கிறது  ..

பக்கத்து இருக்கைக்கோ

பைத்தியம் பிடிக்கிறது.

 

நீ வீடு திரும்புகையில் கூடவே

ஓடிவருகிறது நிலவு ..

கதவை மூடிக்கொண்டாலும்

காத்திருக்கத் தொடங்குகிறது உன் ஜன்னல் திறக்க ..

 

நீ எழுதி முடித்ததும்

வார்த்தைகளைக் கலைத்துப் போட்டு

கவிதைகளாக்கி விளையாடித் தீர்க்கிறது

உன் நாட்குறிப்பேடு …

 

நீ கண்கள் மூடிக் கொண்டதும்

இருண்டு போகிறது உலகம்

கனவுன்னைக் காணத் தொடங்குகிறது …

 

——————————————————————

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

மழையும் மழை சார்ந்த கதைகளும் – 5

01 Sunday Jan 2012

Posted by rejovasan in கதை நேரம்

≈ 18 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Love story, poetic, rain, Story

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: