பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: kavithaigal

சின்னஞ் சிறிய உலகம்

14 Friday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, kavithaigal, Love poems, tamil Kavithaigal, tamil poem

 

கோடி யுகங்களுக்கு முன்

ஒரு பேருந்து நிலையத்தில்

உன்னைச் சந்தித்திருந்த பதினைந்தாம் நிமிடத்தில்

அனுப்பியிருந்தாய் முதல் குறுஞ்செய்தியை

பார்த்ததில் மகிழ்ச்சி என்றாய்

சிறிய உலகம் என்றாய்

நான்கு தெருக்கள் தள்ளி இருந்தும்

இத்தனை நாட்களாய் சந்திக்கவேயில்லையே

என ஆச்சர்யம் கொண்டாய்

எந்தத் தெரு என நீயும் சொல்லவில்லை

நானும் கேட்கவில்லை

அலைபேசி எண் வாங்கினாய்

தந்தாய்

அடிக்கடி பேசுவோம் என்றாய்

நீயும் அழைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை

நீ பேருந்தில் ஏறிச்சென்ற பின்பும்

அங்கேயே நின்று கொண்டிருந்தேன்

நீ கூறிய சிறிய உலகத்தில் 

அதே பேருந்து நிலையத்தில்

எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

இன்னுமொரு யுகம் தாண்டி

அதேபோல் தற்செயலாய்

இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது

கலங்கரைவிளக்க வணிக வளாகத்தின்

இசைக்கோப்புகளும் பொம்மைகளும்

வாழ்த்து அட்டைகளும் வாசனைகளும்

நிறைந்திருக்கும் கடையொன்றின் புத்தகப் பிரிவில்

மறுபடியும் சிறிய உலகமென்றாய்

இந்தப் புத்தகக்கடை

ஊரிலேயே ப்ரியமான இடமென்றாய்

வெகு நாட்களாய் நீ தேடிக் கொண்டிருந்த புத்தகம்

என் கையில் இருக்க

ஆச்சர்யம் கொண்டாய்

நீ கூறிய சிறிய உலகத்தில்

இந்த ஊரிலேயே

உன் ப்ரியத்துக்குகந்த புத்தகக் கடையில்

இதே புத்தகத்தை

எத்தனை முறை கைகளில் வைத்துக் கொண்டு

நின்றிருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

என்னிடமிருந்து அந்தப் புத்தகத்தை

இரவல் வாங்கிக் கொண்டாய்

நான்காவது மாடியின் உணவகம் ஒன்றில்

சுமாரான தேநீர் அருந்தினோம்

பர்கர் கடையின் முன்பு

கான்க்ரீட் கோமாளி அமர்ந்திருந்த இருக்கையில்

அருகருகே அமர்ந்து கொண்டோம்

அவனுடன் புகைப்படம் எடுத்துத்தரச் சொன்னாய்

வார்த்தைகள் தீர்ந்துபோயின

நகரும் ஏணிப்படிகள் வேகமாக இறங்கின

மின்சார ரயில் நிலையத்திற்கு தூரம்

குறைவாக இருந்தது

சரியான நேரத்திற்கு ரயிலும் வந்தது

அடுத்தமுறை சந்திக்கையில்

புத்தகத்தைத் திரும்பத் தருவதாய்

குறுஞ்செய்தி அனுப்பினாய்

நீயும் தரவில்லை

நானும் கேட்கவில்லை

அந்த சுமாரான சுவை கொண்ட தேநீர்

இன்னுமொருமுறை கிடைக்கவேயில்லை

நான் அருகே அமர்கையில்

கோமாளி ஒருபோதும் சிரிக்கவேயில்லை

மின்சார ரயில் கம்பி பற்றி

கையசைத்துச் செல்லும் எல்லாரிடமும்

உனது சாயல் தேடித் தோற்றிருந்த ஒரு நாளில்

காலம் என்னை

உனது சிறிய உலகத்தில் இருந்து

நாடு கடத்த முடிவு செய்திருந்தது

எத்தனை யுகங்கள் தாண்டியும்

இனி நிகழாது நம் சந்திப்பு

கடல்தாண்டிக் காத்திருக்க

ஒருவேளை நீ வரக்கூடும்

என்றொரு இடமுமில்லை

இல்லாத ஒன்றை எப்படி

இழக்கக்கூடும்

உனக்கென முதலும் முடிவுமான 

குறுஞ்செய்தி அனுப்பி

கிளம்பும் விமானத்தைப் பழி சொல்லி

அணைத்து வைத்தேன் அலைபேசியை

இரவும் பகலும்

நிலமும் கடலும்

கடந்த

நீண்ட பயணம் அது

தரை இறங்கியதும்

உயிர் வந்த அலைபேசி

உன் மூன்றாவது குறுஞ்செய்தியை

படிக்கிறாயா என்றது

பதிலை எதிர்பாரா கேளிவியின் பதிலை

எதிர்கொள்ளத் திராணியின்றி

மீண்டும் அணைத்தேன்

பனியும் கனவும்

கண்ணீரும் புன்னகையும்

கடந்த

மூன்று தினங்களுக்குப் பின்

குறுஞ்செய்தியைத் திறந்தேன்

கடித உறை மட்டுமே இருக்க

உனது செய்தி

வரும் வழியில் எங்கோ

அலைக்கற்றைகளில் கரைந்திருந்தது

என்ன அனுப்பியிருந்தாய்

அந்தக் குறுஞ்செய்தியில் ?

மீண்டும் நீ சொல்லப்போவதுமில்லை

நான் கேட்கப் போவதுமில்லை

கடிதங்களில் காதலித்தவர்கள்

பாக்யவான்கள்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

31 Thursday Jan 2013

Posted by rejovasan in வெண்ணிற இரவுகள்

≈ 3 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Kathal Kavithaigal, kavithaigal, poems, tamil Kavithaigal

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பிளாஸ்டிக் வார்த்தைகள்

02 Thursday Aug 2012

Posted by rejovasan in கவிதை

≈ 3 Comments

Tags

kavithaigal, poem, tamil Kavithaigal, tamil poem

 

பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்  

சேர்ந்து கொண்டே இருக்கின்றன

வார்த்தைகள்

கொடும் நஞ்சைப் போல ..

 

நானொன்றும் சர்ப்பம் அல்ல

இருப்பினும்

யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ

என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …

 

கண்ணாடி பார்த்துப் பேசியோ

கவிதைகள் மட்டும் எழுதியோ

தீர்க்க முடியாது வார்த்தைகளை

ஒருபோதும்  …

 

உமிழ்நீர் சுரப்பிகள் போல

உதிர்க்கவியலா

வார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..

 

அலைபேசியும்

இணையதள அரட்டைகளும்

கனவில் பேசும் வார்த்தைகள் …

எங்கேயோ மறந்து போய்

புதைத்துவிட்ட நினைவுகளின் வடுக்களை

அனிச்சையாய் வருடச் செய்கின்றன

கலைந்து போனதும் …

 

ஜன்னலுக்கு வெளியே மட்டும்

மாறும் பருவ காலங்கள்

அறைக்குள்ளே பெய்வ தென்னவோ

மௌனப் பனி மட்டும் …

 

வாரத்தின் நாட்களெல்லாம்

ஒரே போல் இருக்கையில்

எதற்காக

ஏழு வேறு பெயர்கள் .. 

 

வெகுநேரம் கழித்து

எதிர்படும் எவனிடமோ

பதில் வணக்கம் சொல்ல

முற்படுகையில்

நடுங்கிக் கொண்டே வார்த்தைகள்

வராமல் போக

செருமும் தொண்டைக்குள்

சுருண்டிருக்கிறது

தனித்திருப்பதன் பயம் ..

 

தனித்திருப்பதென்பது

சுதந்திரமல்ல

வெறுமனே தனித்திருப்பது

அவ்வளவே …

 

———————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: