பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: poem

துப்பறியும் வரிகள்

13 Wednesday Oct 2021

Posted by rejovasan in Uncategorized

≈ Leave a comment

Tags

ஆதலினால் கவிதை ..., Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

It's a Man's World

ஒரு பிரத்யேக நாளுக்காய்

காத்திருந்த

உன் விருப்பத்துக்குகந்த கிண்ணத்தில் 

ஒரு கேக் துண்டுப் புதிரை

நிறுத்திச் சென்றிருக்கிறாய்

 

வளையமிட்டிருக்கிறாய்

உன் மாய விரல்களால் 

 

தொடாமலே எறும்பொன்று

 

வெள்ளைச் சர்க்கரைப் பூச்சு

ஓரமாய் உருக 

தோல் சுருங்க

உச்சியின் செர்ரிப்பழம்

 

பாதி மௌனத்தில்

புகைந்த மெழுகுவர்த்தி 

உதடுகள் குவிக்குமுன்

என்ன வேண்டினாய் ?

 

காலிக் கோப்பை அருகில் 

ஆழத்தில் 

காய்ந்த ஒயின் கறை

விளிம்பில் உன் பாதி இதழ்

 

சொற்களை விடுத்து

உன் குரலை

எடுத்துச் சென்றிருக்கிறாய் 

 

நீ களைந்த ஆடைகளை

மொய்த்தபடி அந்துப்பூச்சிகள்

 

உனது தானியங்களுக்காகவும்

ப்ரியங்களுக்காகவும்

உப்பரிகையில் காத்திருக்கின்றன

புறாக்கள்

 

நீ துவட்டிய 

தூவாலை மட்டும் 

வெய்யில் பார்த்தபடி

மீண்டும் மீண்டும்

 

எங்கே புறப்பாடு 

எப்பொழுது மீள்வருகை 

எந்த குறிப்பொட்டியுமில்லை 

குளியலறைக் கண்ணாடி மேல்

 

யாயொரு தடையமும் 

இன்றி

காற்றில் கரைந்திருக்கிறாய்

 

கிளம்பும் அவசரத்தில் 

கூட்டிச் செல்ல மறந்திருக்கிறாய்

என்னை 

 

கதையின் 

கடைசி வரியினில்

அவிழ்கிறது புதிர்

 

ஆலகாலக் கோட்டினை

அழித்துவிட்டு 

இனிப்பிற்கு வழி விடுகிறேன்

 

நடுங்கத் தொடங்குகிறது

உன்மத்தத்தில் எறுப்பு

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

கீழிருந்து மேலாய் ஏழாவதாய்

08 Friday Oct 2021

Posted by rejovasan in Uncategorized

≈ 1 Comment

Tags

ஆதலினால் கவிதை ..., Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

Dark art for our inner demons

அன்று மழை பெய்ததா

தெரியவில்லை

பெய்திருக்கத்தான் வேண்டும்

நினைவில் குளுமை

கண்களில் வெளிச்சக் கீற்று

உடலில் ஒட்டிக் கொள்ளும்

ஆடை

காற்றில் கரைகிறது 

எனது வெளி

ஒரு சுழலில் ஒரு நொடியில்

நிச்சயம் அங்கே தான்

இருக்கிறேன்

மனதில் முணுமுணுத்திருந்த

அதே பாடல் கூடக் கேட்கிறது

நகர்ந்தபடி இருக்கிறது

உள்ளே வரச்சொல்லிப் படபடக்கும்

கனவின் வாசல்

நீலச்சிறகு பட்சிகள் வல்லுகிர் பற்றிய

வருகைப் பதிவேட்டில்

கீழிருந்து மேலாய்

ஏழாவதாய்

உன் சாய்ந்த கையெழுத்து

சுழன்று ஏறும்

படிக்கட்டுகளை

விழுங்கிக் கொண்டிருக்கின்றன

வனயட்சியின் நாவுகள்

வானம் தேடி அலைந்தபடி

தொட்டிப்பூக்கள் வாசனை

இடதும் வலதுமாய்

திசைகாட்டிக் குதித்தோடும்

மஞ்சற் மாயப்பூனைகள்

எத்தனை பாதைகள்

எத்தனை திருப்பங்கள்

எத்தனை நிகழ்தகவுகள்

எத்தனை கதவுகள்

தவறான இடத்தில்

சரியான நேரத்தில்

ஒரு புதிர்விளையாட்டின்

வலைப்பின்னலில்

தொலைந்து போய்

வந்து நின்றது

இரண்டு வினாடிகளில்

நீ வெளிவரப்போகும்

கதவின் முன்னால்

கதவின் பின்

பூஜ்ஜியமும் ஒன்றும் பேசும்

ஓராயிரம் வெளிச்சப் பூச்சிகள்

அத்தனையும் தாண்டி

உன் ஒரு புன்னகை

அங்கே முடிகின்றது

இந்த நினைவுத் துண்டு

எவ்வளவு துளாவியும்

நினைவின் பெட்டகத்தில்

அதன் பின் கதைத்தொடர்ச்சி

காணக் கிடைக்கவில்லை

இப்படித்தான் நடந்ததா ?

இப்படியும்

நடந்திருக்கக் கூடும்

தெரியவில்லை

ஆனால் அன்று

நிச்சயம் மழை பெய்தது.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை

30 Thursday Sep 2021

Posted by rejovasan in Uncategorized

≈ 1 Comment

Tags

Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

letter

அன்புள்ள என ஆரம்பித்திரா 

உன் பதில் கடிதம் 

கிடைத்தது

 

குறைந்த பட்சம் 

என் பெயரையாவது 

குறிப்பிட்டிருந்திருக்கலாம்

 

பதில் கடிதம் என்பதால் 

தேவையில்லை 

என நினைத்திருந்திருக்கலாம்

 

இருந்தும்

அன்புள்ள மட்டுமாவது 

இருந்திருக்கலாம்

 

ஒரு பெயருக்காவது

 

முடிவில்

நாளும் நேரமுமிட்ட

உன் கையொப்பமில்லாவிடினும்

நிறுத்தற் குறிகளும் 

ஒற்றுகளும் 

வார்த்தை தேர்வுகளும் 

நிச்சயமாய் நீ தான்

 

நீல நிற 

எழுத்துருக்களையே 

பயன்படுத்தி இருக்கிறாய்

 

உன் வாசனைதான் 

வழியில் தவறிவிட்டிருக்கிறது

 

உனது கடைசிக் கடிதத்தைப்

பற்றிக் கொண்டு

மீப்பெரும் முடிவிலியில்

கதவுகள் தேடித் திரியப்போகிறவனுக்கு

உன்னால் அனுப்ப முடிந்தது 

வெறும் ஆறு வரிகள் தானா ?

 

உன் கருணையின் 

உடைந்த ஒரு துண்டோ

 

என் ரகசியக் கனவொன்று

என்றேனும் பலிக்ககூடுமென்ற

பொய் வரமோ

 

புதிதாக நீ மாற்றியிருக்கும்

தொலைபேசி எண்ணோ

 

எனக்கு பதில் எழுத

பாதியில் நீ மூடிவைத்திருக்கும்

புத்தகத்தின் 

அடிக்கோடிடப்பட்ட வரிகளோ

 

நீ 

நிச்சயாமாய் கிடைக்குமென்ற

எனக்கான காதல் 

ஒளிந்திருக்கும் திசை குறித்த

ரகசிய வரைபடமொன்றோ

 

என் அந்திக்காலத்திற்காய்

உன் அன்பின் குறுவாள் 

ஒன்றோ

 

நம் நிழற்படங்களின் சாம்பற்மேட்டில்

எரியாமற் தப்பித்த 

மிச்சங்களில் ப்ரியமானதை

ஊதி உயிர்பித்தோ

 

ஆறுதல் இணைப்பாக 

அனுப்பியிருக்கலாம் தானே !

 

ஒரு காவிய நிராகரிப்பின் 

வலியை 

எதிர்பார்த்திருந்தவனுக்குத் தர

குறைந்தபட்சம் 

ஒரே ஒரு காரணம்

கூடவா கிடைக்கவில்லை ?

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பத்து இலக்க இடைவெளி

24 Friday Sep 2021

Posted by rejovasan in Uncategorized

≈ Leave a comment

Tags

காதற் சிறப்புரைத்தல, Love poems, poem, tamil Kavithaigal

Bendición del Oficial del Cielo

இத்தனைக்கும் பிறகு 

எவ்வளவு பிடிக்கும் என்று 

நானும் சொல்லவில்லை

அவளும் கேட்கவில்லை

இன்னமும் எழுதுகிறாயா 

எனக் கேட்டாள்

இன்னமும் நீ படிப்பதில்லை 

என்று மீண்டும் 

உறுதி செய்து கொண்டேன்

என்னிடம் எற்கனவே இருக்கும் 

அவளது எண்ணை 

அவள் சொல்லி 

மீண்டும் பதிந்து கொண்டேன்

பாதுகாக்கப்பட்ட அவளது 

முகப்புத்தகக் பிரதேசத்தில்

அனுமதித்துக் கொண்டாள்

கொஞ்ச நாள்

காலை வணக்கம் இனிய இரவு

அனுப்பலாம்

படித்ததில் பிடித்ததைப் 

பகிரமட்டுமே 

அவளது மின் சாளரப்பக்கம் வந்ததாக

பாசாங்கு செய்யலாம்

பதிலுக்கு மரியாதை நிமித்த 

மெய்நிகர் மஞ்சற் புன்னகைகள் 

கிடைக்கப் பெறலாம்

இனி ரகசியமாகப்  

பின் தொடரத் தேவையில்லை

அதைத் தவிர

வேறொன்றும் மாறவில்லை.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

அரூபனின் பிரார்த்தனைகள்

17 Wednesday Feb 2021

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poem, tamil poem

இன்னும் ஐந்து நிமிடங்கள்

இருக்கின்றன

எரியும் நட்சத்திரமொன்று

என் ஜன்னல் வானத்தில்

உன் பெயர் வெடித்துச் சிதற

அதற்குள் துவங்கிவிடுகின்றேன்

எனது பிரார்த்தனைகளை

நாளையேனும்

மின் தூக்கியின்

கதவு திறக்கக் காத்திருக்கையிலோ

சாலைப் போக்குவரத்தின்

சிகப்பிற்கும் பச்சைக்கும் இடையிலோ

பல்பொருள் அங்காடிக் கடையொன்றில்

கடனட்டை தேய்க்குமிடத்திலோ

இசைக்கருவிகளை

வெயிலில் போட்டு விற்கும்

சாலையோர வியாபாரியைக்

கடக்கையிலோ

தொட்டிகளில் பூக்கள் அடைத்துத் தரும்

விற்பனைத் தோட்டத்திலோ

நீ எதிர்ப்படுகையில்

உனது கண்களைச் சந்தித்துக்

கால்கள் தரையில்

நிற்க வேண்டும்

மௌனத்தினை

மறக்க வேண்டும்

புன்னகை மட்டும்

போதாது

தேநீர் பிடிக்குமா

எனக் கேட்க வேண்டும்

அதைத் தெருமுனைக் கடையில்

என்னுடன் அருந்தப் பிடிக்குமா எனவும்

நான் எழுதிக் கொண்டிருக்கும்

நாவலின் நாயகி

உன்னப்போலவே சிரிக்கிறாள்

எனச் சொல்ல வேண்டும்

குறைந்த பட்சம்

என் பெயரையாவது

****

இன்னமும் நான்கு நிமிடங்கள்

இருக்கின்றன

இந்த நாளுக்கான கடைசிப் பூ

பூக்க

அதற்குள் அறிந்து கொள்கிறேன்

உன்னை

நேற்றைய கனவில் நீ அணிந்திருந்த

ஆடையின் நிறம் தான்

உனது விருப்பத்துக்குகந்ததா

தேவதைக் கதைகளின் சாபத்தில்

உன் சாயல் கண்டதுண்டா

மழை பிடிக்குமா

சமீபத்தில் படித்த புத்தகத்தின்

ஏதேனும் ஒரு பக்கத்தில்

புன்னகை மடித்து வைத்திருக்கிறாயா

எனது கவிதைகள்

எதுவாயினும் என்றாயினும்

உன்னைச் சேர்ந்ததுண்டா

நாட்குறிப்பு எழுதுவாயா

பெயரிலியாகவேணும் அதில்

நானுண்டா

பண்பலையில் இந்த நொடியில்

ஒலிப்பரப்பாகும்

நானுனக்கு அர்பணித்த பாடலை

நீயும் கேட்டுக்கொண்டிருக்கிறாயா

எனக்கான முதல் முத்ததை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

யாரையேனும் காதலித்திருக்கிறாயா

உனக்கும் கண்ணீர்

வருமா

யோசித்துப் பார்க்கையில்

நான் காதல் கொண்டது

உன்னைப் பற்றி நானே

உருவக்கிக் கொண்ட பிம்பங்ளிலும்

அதன்  பிரதிபலிப்புகளிலுமே

நீ அதன் உருவகம்

அவ்வளவே

இவைகள் எதுவுமே நீ இல்லாமலும்

போகக்கூடும்

எனில்

நான் காதல் கொண்டது

எந்த நீ

****

இன்னும் மூன்று நிமிடங்கள்

இருக்கின்றன

சாம்பற் பூனைகள் கூட்டம்

ராட்சச

பச்சை நிறக் குப்பைத் தொட்டிகளில்

வீணடிக்கப்பட்ட உணவுகள் வழியும்

நெகிழிப் பேழைகளைக்

கிழித்துத் தேடத் தொடங்க

அதற்குள் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்

என்னை

கூடவே

எனை நீ எங்கே சந்தித்திருக்கக்கூடும்

என்பதையும்

நகல் எடுக்கும் கடையொன்றில்

காகிதக் குவியல்கள் பற்றியபடியோ

பரிசுக் கடையில்

பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்

புரட்டியபடியோ

நீ தொலைபேசிக் கொண்டிருக்கும்

குறுங்கண்ணாடிப் பேழைக்கு

நேர் எதிரே இருக்கும்

மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையிலோ

செர்ரி நிறப் பூக்கள் பூத்திருக்கும்

மேலாடை போர்த்தியபடி

எப்பொழுதும் பனிக்கட்டிகள் அதிகம்

கலந்து தருபவளின்

பழச்சாறு நிலையத்திலோ

வங்கியின் நீண்ட வரிசை

ஒன்றிலோ

அஞ்சலக சிகப்பு நிறப் பெட்டிக்குள்

உனது முகவரி கொண்ட கடிதத்தைச்

சேர்க்கத் தயங்கி

நின்று கொண்டிருக்கும் பொழுதோ

ஊரின் ஒரே நூலகத்தின்

தரைத்தளத்தில்

இடதுபுறத்தில் இருந்து

உனது பிரியமான சிறுகதை எழுத்தாளரின்

தொகுப்புகள் நிறைந்திருக்கும்

மூன்றாவது வரிசையின்

பின்மூலையில்

கொஞ்சமாய் வெளிச்சம் பரப்பியிருக்கும்

சாளரத்தை ஒட்டிய

புத்தக மேஜையிலோ

உனது மாலை வகுப்பொன்றின்

பின்னிருக்கையிலோ

ஒருவேளை நமது சந்திப்பு

நிகழாமலேயே கூட இருந்திருக்கலாம்

உனது பார்வைக் குவியத்தில்

நான் படாமலே போயிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களுக்கு

நிச்சயம்

என்னைத் தெரிந்திருக்கும்

நாமிருவரும்

அதே கணத்தில் அதே நிலத்தில்

இல்லாமலிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களில்

நானும் இருந்திருக்கிறேன்

******

இன்னும் இரண்டு நிமிடங்கள்

இருக்கின்றன

இன்றைய இரவிற்கான

பனி படற

அதற்குள் கேட்டு விடுகின்றேன்

உன்னிடம்

என் பாவ மன்னிப்பினை

உன் அந்தரங்கம் உதிர்த்த

சருகுப் பூக்களை

எனது கனவுப் புத்தகத்திற்குள்

நீ அறியாவண்ணம்

பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்காக 

உனது வசந்தத்தின் நிறங்களில்

கொஞ்சத்தை

எனது கவிதைகளுக்கெனத் 

திருடிக் கொண்டதற்காக

நமது படுக்கையறைகளைப்

பகிர்ந்துள்ளது

ஒரே சுவர்தான் என்பதை

நான் மட்டுமே

அறிந்து வைத்திருப்பதற்காக

சமயங்களில்

உன் கருணையின் தானியங்கள்

பொருக்க வரும் சிட்டுகுருவிகள்

ஜன்னல் மாற்றி நுழைந்து

என் அறையின் நிச்சலனம் கண்டு

அலறி ஓடியதற்காக

உதிர்க்க முடியாத

ஒரு வழுவிழந்த சிறகைப் போல

உன் நினைவின் ஓரத்தில்

இன்னமும்

ஒட்டிக் கொண்டிருப்பதற்காக

***

இன்னும் ஒரு நிமிடம் தான்

இருக்கிறது

உன் பாடல் ஒலிபரப்பப் பட

அதற்குள் இன்னுமொருமுறை

நிரப்பிக் கொள்கிறேன்

என் கோப்பையினை

நான் விரும்புவதாலும்

நீ விரும்பாவிட்டாலும்

ஒரே கூரையின் கீழ்தான்

நாமிருவரும்

இரவுக்கு ஒளிய வேண்டியிருக்கிறது

எழுதப்படாத நம் மௌன ஒப்பந்தப்படி

நமக்கிடையே வளர்ந்திருக்கும் சுவரில்

கரம் வைக்கிறேன்

நீ அனுமதித்தால்

அதன் வேர்கள்

உன் படுக்கை அறை வரை

நீளட்டும்

ப்ரியம் இருந்தால்

பற்றிக் கொள்

சொல்லப்படாத அன்பினைப் போலவே

துடைக்கப்படாத கண்ணீருக்கும் தான்

என்ன பயன்.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: