பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: poem

சிகப்பு நிற மேப்பிள் வயலின்

13 Thursday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 1 Comment

Tags

கவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

 

உனது பாடல்

இன்றும் நன்றாக இருந்தது

உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்

இரண்டாவது பின்வரிசை

வலதுபுறக் கடைசியில்

உனது பாடலுக்கு

வயலின் வாசிப்பவன் நான்

ஒரேயொரு முறை

என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்

எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்

அழகாய் இருப்பதாகச் சொன்னாய்

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்

வசந்தத்தின் உச்சத்தில் மாலை

தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்

வயலினுக்காய் வீணாக வேண்டாம்

கைகள் கோர்த்து நடக்கலாம் வா

எனச் சொல்லியிருந்திருக்கலாம்

கடற்கரை ஒட்டிய

மாலுமிகள் உணவகத்தில்

ஒயின் பருகியிருந்திருக்கலாம்

அங்கிருக்கும் நடனமேடையில்

கால்கள் வலிக்க

ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்

படகுத்துறை பாலத்தில்

மஞ்சள் விளக்கொன்றின் கீழ்

உனக்காக எழுதிய பாடல்களை

படித்துக் காட்டியிருந்திருக்கலாம்

அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்

ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்

மாறாக நான் ஒரு கனவானைப் போல்

நடந்து கொண்டேன்

கண்டிப்பாக பிறிதொருமுறை

வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்

புன்னகைத்தேன்

பின் ஒருபோதும் நாம்

பேசிக்கொள்ளவயில்லை

நீ உன் பாடலும்

நான் என் வயலினுமாய்

இசை மட்டுமே நமக்கான

பேசு மொழியாயிருந்தது

ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்

உதிர்ந்து கொண்டேதானிருந்தன

யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்

யார் யாரோ ஒயின் பருகினர்

யார் யாரோ நடனமாடினர்

யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்

வயலினை உடைத்திருந்தேன் நான்

இதே போல நேற்றைய இரவினில்

அடுத்த கோடை விடுமுறையில்

மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி

வராமலேயே போன

எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்

அதற்கும் முந்தைய இரவுகளில்

பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு

நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்

திரையரங்கமொன்றில்

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்

இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்

வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்

இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்

இன்னபிறவாகவும் இருந்தாய்

எல்லா இரவுகளிலும்

ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத

கனவானாகவே இருந்தேன்

கார்காலம் ஒரு பேயைப் போல

நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது

துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்

ஆயத்த ஒலி கேட்கிறது

புறாக்கள் சுவர் பொந்துகளில்

பதுங்கத் துவங்கியிருக்கின்றன

சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு

இந்த நகரத்தில்

ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்

நான்

ஒரு காலி மதுக்கோப்பை

இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை

கண்ணாடி மீன் தொட்டி

உன்னுடன் இருந்த பொழுது

என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்

ஏன் இப்பொழுது மட்டும்

அறை மொத்தமும்

ஏன் இந்த இரவு

தவறவிட்ட தருணங்களையும்

அது குறித்தான கற்பனைகளையும்

என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே

பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது

***    

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

டிராகன் இளவரசி

12 Wednesday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

நீ வருவதாய் சொன்ன

வாசலின் முன்பு தான்

நின்று கொண்டிருக்கிறேன்

வந்திருப்பது ஏன் என்று

உனக்கும் புரியும்

நீ வரச்சொன்ன காரணமும்

எனக்குத் தெரியும்

இன்னும் எத்தனை காலம்

இதே விளையாட்டு

நான் தட்டப்போவதும் இல்லை

நீ தாழ்பாள் இடவும் இல்லை

பின்னே எதற்கிந்தக் கதவு

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

நீ தள்ளிச் செல்வதும்

நான் தயங்கி நிற்பதும்

நீ மறுத்துப் போவதும்

நான் மரத்துப் போவதும்

மீண்டும்

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

கண்ணீரும் கவிதையும்

வார்த்தை மாறாமல்

நடப்பது தானே

ஏற்கனவே படித்த புத்தகம்

எத்தனை முறை புரட்டினாலும்

மாறியா போய்விடும்

கடைசி வரி

நான் வேறு புத்தகத்தைத்

தொடப்போவதுமில்லை

நீ இந்தப் புத்தகத்திற்குள்

வரப்போவதுமில்லை

பின்னே எதற்காக எழுதப்பட்டது

நமது கதை

இந்தக் கோட்டையின் உச்சியில்

உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும்

வேறில்லை என்பது

நான் மட்டுமே அறிந்த ரகசியம்

இத்தனைக்கும் பிறகு

உன் கூந்தல் ஏணி

கீழே வரக் காத்திருக்கக்

காரணம் ஒன்று தான்

நம் முதல் முத்தத்தைப்

பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு

நமக்குத் தரப்படவேயில்லை

பின் எப்படித் தீரும்

நம் சாபம்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பறவைகளின் ஆலாபனை

11 Tuesday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 1 Comment

Tags

கவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

நத்தையின் கூடு போல்

சுருண்டு கிடக்கிறது உன் வனம்

மீளமுடியா சாபம் போல்

நீண்டு நெளிந்து உன் பாதைகள்

கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே

கண்களைக் குருடாக்குகின்றன

உன் நட்சத்திரப் பூக்கள்

நாணல்கள் விம்மித் தணியும் சத்தம்

நடுங்கச் செய்கிறது

ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும்

பறவைகளின் ஆலாபனைகள்

உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன

எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய்

என் யட்சி

சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன

உன் ரகசியங்களின் சாவியை

தூரத்துப் பாறை ஒன்று

சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல

காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

வழியெங்கும் உன் வாசம் போர்த்தி

தேடித் திரிந்து தேகம் துவண்டு

உன்னிடமே யாசிக்கிறேன்

உன் கருணையின் ஊற்றினை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

என் யட்சி

தேனீக்கள் போலத் துளைக்கிறது

இந்தப் பனி

உனது ஆயிரம் நாவினால்

தீண்டு

பற்றி எரியட்டும்

இந்தக் காடு

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

ஜன்னல் பூனைகள்

08 Saturday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 2 Comments

Tags

கவிதை, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

 

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்

 

பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்

 

யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம்

வா

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்

 

மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து

ஊதித் தீ மூட்டுவோம்

 

அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்

 

சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

 

***

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பிரம்மச்சாரி உலா

25 Tuesday Sep 2012

Posted by rejovasan in கவிதை

≈ 11 Comments

Tags

poem, tamil

 

காலணிகளை அடுக்கிடத் தேவையில்லை

காலுறைகளை

தவ்வக் காத்திருக்கும் தவளைகள் போலச் சுருட்டி

எங்கு வேண்டுமாலும் எறிந்துவைக்கலாம்

ஆடைகள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்

உள்ளாடைகள் வவ்வால்கள் என

கதவிடுக்குகளில் காணக்கிடக்கலாம்

குளியலறையின் கால்வைக்கும் இடம் தவிர

மீதமெல்லாம் ஆனந்தமாய் அழுக்காக்கி வைக்கலாம்

நாற்காலிகள் காணாமல் போனவைகள் பற்றிய

அறிவிப்புகளில் இருக்கலாம்

சர்க்கரை உப்பு இன்ன பிற அவசியமற்ற சரக்குகளின்

கையிருப்பு பற்றிக் கவலை வேண்டாம்

முக்கியமாய் காப்பிப் பொடிக்கும் தேநீர்த் துகள்களுக்கும்

ஆறு வித்யாசங்கள் அறிந்து வைக்க அவசியமில்லை

பக்கம் கொள்ளாத அளவு இருக்கவே இருக்கிறது

பிரம்மச்சாரியின் அறையொன்றில் இருப்பதன் அனுகூலங்கள்  

அதன் அவஸ்தைகள் மட்டும் உறைப்பதேயில்லை

எதிர்பார்க்காத நாளொன்றில் அறையுடன்

பெண்பால் அறிமுகம் நடக்கும் வரை …

 

————————————————————–

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: