பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: poem

பிரம்மச்சாரி உலா

25 Tuesday Sep 2012

Posted by rejovasan in கவிதை

≈ 11 Comments

Tags

poem, tamil

 

காலணிகளை அடுக்கிடத் தேவையில்லை

காலுறைகளை

தவ்வக் காத்திருக்கும் தவளைகள் போலச் சுருட்டி

எங்கு வேண்டுமாலும் எறிந்துவைக்கலாம்

ஆடைகள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்

உள்ளாடைகள் வவ்வால்கள் என

கதவிடுக்குகளில் காணக்கிடக்கலாம்

குளியலறையின் கால்வைக்கும் இடம் தவிர

மீதமெல்லாம் ஆனந்தமாய் அழுக்காக்கி வைக்கலாம்

நாற்காலிகள் காணாமல் போனவைகள் பற்றிய

அறிவிப்புகளில் இருக்கலாம்

சர்க்கரை உப்பு இன்ன பிற அவசியமற்ற சரக்குகளின்

கையிருப்பு பற்றிக் கவலை வேண்டாம்

முக்கியமாய் காப்பிப் பொடிக்கும் தேநீர்த் துகள்களுக்கும்

ஆறு வித்யாசங்கள் அறிந்து வைக்க அவசியமில்லை

பக்கம் கொள்ளாத அளவு இருக்கவே இருக்கிறது

பிரம்மச்சாரியின் அறையொன்றில் இருப்பதன் அனுகூலங்கள்  

அதன் அவஸ்தைகள் மட்டும் உறைப்பதேயில்லை

எதிர்பார்க்காத நாளொன்றில் அறையுடன்

பெண்பால் அறிமுகம் நடக்கும் வரை …

 

————————————————————–

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பிளாஸ்டிக் வார்த்தைகள்

02 Thursday Aug 2012

Posted by rejovasan in கவிதை

≈ 3 Comments

Tags

kavithaigal, poem, tamil Kavithaigal, tamil poem

 

பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்  

சேர்ந்து கொண்டே இருக்கின்றன

வார்த்தைகள்

கொடும் நஞ்சைப் போல ..

 

நானொன்றும் சர்ப்பம் அல்ல

இருப்பினும்

யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ

என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …

 

கண்ணாடி பார்த்துப் பேசியோ

கவிதைகள் மட்டும் எழுதியோ

தீர்க்க முடியாது வார்த்தைகளை

ஒருபோதும்  …

 

உமிழ்நீர் சுரப்பிகள் போல

உதிர்க்கவியலா

வார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..

 

அலைபேசியும்

இணையதள அரட்டைகளும்

கனவில் பேசும் வார்த்தைகள் …

எங்கேயோ மறந்து போய்

புதைத்துவிட்ட நினைவுகளின் வடுக்களை

அனிச்சையாய் வருடச் செய்கின்றன

கலைந்து போனதும் …

 

ஜன்னலுக்கு வெளியே மட்டும்

மாறும் பருவ காலங்கள்

அறைக்குள்ளே பெய்வ தென்னவோ

மௌனப் பனி மட்டும் …

 

வாரத்தின் நாட்களெல்லாம்

ஒரே போல் இருக்கையில்

எதற்காக

ஏழு வேறு பெயர்கள் .. 

 

வெகுநேரம் கழித்து

எதிர்படும் எவனிடமோ

பதில் வணக்கம் சொல்ல

முற்படுகையில்

நடுங்கிக் கொண்டே வார்த்தைகள்

வராமல் போக

செருமும் தொண்டைக்குள்

சுருண்டிருக்கிறது

தனித்திருப்பதன் பயம் ..

 

தனித்திருப்பதென்பது

சுதந்திரமல்ல

வெறுமனே தனித்திருப்பது

அவ்வளவே …

 

———————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

கவிதையும் அபத்தங்களும்

24 Sunday Jun 2012

Posted by rejovasan in கவிதை

≈ 5 Comments

Tags

Love poems, poem, tamil poem

 

“அன்பே”

எனத் தொடங்கி

ஒரு காதல் கவிதை எழுதிட

வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.

 

அபத்தமாய் இருக்கிறது.

 

அந்த நாட்களைக் கடந்துவிட்டேனோ.

 

பத்திரிக்கையின்

ஏதாவதொரு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்

சிகப்பு இதயத்தினுள்  அம்பு துளைத்த படத்தையொட்டிய

கவிதையினி

புன்னகை தராதோ !

 

உன் பார்வை ஒன்றின் நினைவு

போதாதோ

என் விரல்களின் வழி

வார்த்தைகள் இறங்கி வர …

 

பார்பதை எல்லாம் வார்த்தைகள் கோர்த்துக்

கவிதைகளென்றிருந்தேனே

எங்கே போயின அந்த மாலை நேரங்களும்

மஞ்சள் வெயில் நாட்களும் …

 

ஒரு கவிதை என்னுள்

ஏற்படுத்தியிருந்த  தாக்கங்களும்

என்னுள்ளான  தாக்கங்களால்

ஏற்பட்டிருந்த கவிதைகளும்

எப்படிப் போயின காணாமல் …

 

கவிதைக்குரிய எல்லா வார்த்தைகளும்

என்று அழிந்து போயின

என் அகராதியில் இருந்து …

 

இப்பொழுதிருக்கும் நானாக

எப்பொழுது மாறிப்போனேன் …

 

இனியுமொரு கவிதை எழுதிட

என் வார்த்தைகளில் உயிரில்லை என

நம்புவதில் எதற்கித்தனை பிடிவாதம் …

 

“அன்பே”

எனத் தொடங்கி

ஒரு காதல் கவிதை எழுதிட

வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.

 

அபத்தமாய் இருக்கிறது.

 ———————————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

என்னைச் சந்திக்க கனவில் வராதே …

22 Tuesday May 2012

Posted by rejovasan in கவிதை

≈ 4 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, poem

 

மீண்டும் கனவுகள் ..

 

எறும்புகளைப் போலத்

தீராப்பசியுடன்

என் உணர்வுகளெங்கிலும்

ஊறித் திரிகிறாய்  ..

உறங்கியும் உறங்காத உன்மத்த நேரங்களில்

என்னைத் தின்கிறாய் .

எத்தனை முறை சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவில்

வராதே என்று.

 

எத்தனை முறை உன்னைத் துரத்துவது

இனியும் என்ன தான் செய்வது ..

இமைகளை மூடுகிறேன்

விழிகளுக்குள் இறங்கிடுகிறாய்

எங்கே ஒளிந்திருந்தாய் இத்தனை நேரமாய் ..

 

என்றோ பார்த்த புகைப்படத்தின் ஞாபத்திலா

தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலிலா

பேசிய வார்த்தைகளிலா

மௌனப் புன்னகையிலா

தலை மேல் சுற்றியழும் மின்விசிறியின் பின்னாலா

நாட்குறிப்பேடுகளின் மழுங்கிய பக்கங்களின்

மடங்கிய முனைகளிலா 

உன் நினைவுகளால் முழுவதும் துருவேறிப் போயிருக்கும்

என்னுள்ளா …

 

நீ தலைகோதுவதும்

தோள் சாய்வதும் 

மடி சேர்த்துக் கொள்வதும்

பேசிச் சிரிப்பதுவும்

மெதுவாய் பின் முறைப்பதுவும்

உதடுகளின் ஈரங்களும்

நிஜமாய் இருக்கின்றன

சில காயங்கள் புதிதாய் பிறக்கின்றன

சில நிதர்சனங்கள் மறக்கின்றன

சுடும் சுவாசமும் பிசுபிசுக்கும் கண்ணீரும்

அருகே .. மிக அருகே.

தொடர்பறுந்து வியர்த்தெழும் வேளைகளில்  எல்லாம்

‘வீல்’ என்று அழுகிறது மனது ..

 

எப்படிச் சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவுகளில்

வராதே என .

 

டிஸ்கி  1:-

யாரேனும் நா முத்துக்குமாரின்  “என்னைச் சந்திக்க கனவில் வராதே” புத்தகத்தை வாங்க விரும்பினால் …

டிஸ்கி 2 :-

மாப்பிள்ளை நான் தான் .. நான் போட்டிருக்க சட்டை மட்டும் தான் நா முத்துகுமாரோடது .

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

விழித்திருப்பவன் இரவொன்றிலிருந்து எல்லோருக்குமான பாடல் …

14 Tuesday Feb 2012

Posted by rejovasan in கவிதை

≈ 15 Comments

Tags

poem

என்ன இருக்கிறது

இருபத்தேழு வயதிற்குப் பின் …

 

எதற்கெடுத்தாலும் எரிச்சல்

சீப்பில் உதிர்ந்தொட்டிக் கொள்ளும்

மயிர் பற்றிய கவலை

மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டாலும்

ஒளிந்துக் கொள்ளத் தெரியாத தொப்பை

இளமையாய் இருந்ததன் நினைவுகள்

நிறைய கழிவிரக்கம் 

போக்குவரத்து நெரிசலும் புகையும்

ஆறிப் போன உணவை விழுங்க

ஒதுக்கப்பட்ட இரண்டு நிமிடங்கள்

நிறைய வியர்வையும் மூச்சிரைப்பும்

 

திருமண அழைப்பிதல் பார்கையில்

வயிற்றைக் கவ்வுகிறது பயம்

எதிர் பார்க்காத தருணத்தில்

எதிர்பார்க்காத இடமொன்றிலிருந்து

வரப் போகும் அழைப்பிதழில்

எதிர்பார்க்காத பெயரொன்று

இருந்துவிடக் கூடும் என்ற அச்சத்திலேயே

கழிகின்றது நாள் மொத்தமும் …

 

மழையும் , குழந்தைகளும்

சுமைகளாய்த் தெரிகிறார்கள்

கவிதைகள் கழுத்தை

நெரிக்கின்றன

புன்னகைக்க மறந்து போய்

மனம்

நேற்றைய சுகமான நினைவுகளிலோ

நாளை பற்றிய அவநம்பிக்கைகளிலோ

மட்டுமே மையம் கொள்கிறது 

 

எல்லாரும் உற்றுப்பார்ப்பது

நெளியச் செய்கிறது

கண்ணுக்குத் தெரியாத பாரமொன்றை

தலையில் ஏற்றி வைத்து ஓடச் சொல்வது

அவர்கள் பழக்கமாயிருக்கிறது

எல்லாவற்றின் காரணமாயும்

நம்மை நோக்கி நீளக் காத்திருக்கும்

சுட்டுவிரல்கள்

துப்பிக் கொண்டே இருக்கின்றன

தோட்டாக்களை …

 

தத்துவங்கள் பிடிக்கின்றன.

கடவுளைப் பழிப்பதும்

கூடவே

கன்னத்தில் போட்டுக் கொள்வதும்

பழகியிருக்கிறது.

 

சமயங்களில்

 

யாருக்கும் தெரிலாமல்

மறைந்து போவதும் 

 

புகைப்படங்களைக்

கிழித்தெறிவதும்

 

உணவிருந்தும் பசித்திருப்பதும்

 

கொஞ்சமேனும் சிரித்துப் பார்ப்பதும்

 

நிறைய அழுவதும்

 

கோபம் கொள்ளப் பழகிக் கொள்வதும்

 

கவிதைகள் எழுதுவதை

நிறுத்திக் கொள்வதும் கூடச்

 

சாலச் சிறந்ததெனத் தோன்றுகிறது.

 

என்ன இருக்கிறது

உறக்கமில்லா இரவின் பின்னே ..

நீண்ட பகலைப் பற்றிய பயத்தினைத்

தவிர …

 

——————————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 156 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்
  • ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்
  • அரூபனின் பிரார்த்தனைகள்
  • யௌவனத்தில் நடுங்கும் இரவு
  • சின்னஞ் சிறிய உலகம்

Top Posts

  • வாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்
  • ஆதாமும் அதே ஆப்பிளும் ... உரையாடல் கவிதைப் போட்டிக்காக

Create a website or blog at WordPress.com

Cancel

 
Loading Comments...
Comment
    ×
    %d bloggers like this: