Tags
ஒரு வினோதமான பந்தயத்தில் இருக்கிறேன் .. றோம்.
கல்லூரி இரண்டாம் வருடம் .. மார்ச் மாதமாக இருக்கலாம் .. பாலா வந்து சொன்னான் .. தமிழ் மன்றத்துல சிறுகதைப் போட்டி வச்சிருக்காங்க … தலைப்பு ஊஞ்சல்.
அதற்கு முன்பு வரை சிறுவர் மலர் படித்துக் கொண்டிருந்தவனிடம் சிறுகதை என்றால் ? அப்பொழுது தான் சுஜாதாவும் , தபூ சங்கரும் அறிமுகமாகி இருந்த நேரம்.
இருவரும் கதை எழுதுவது என முடிவு செய்தோம். எந்த பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படவில்லை. எழுதியும் தொலைத்தோம்.
இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. எந்த தைரியத்தில் எழுதத் துவங்கினேன் என்று. எவ்வளவு தேடியும் மூலப் பிரதி கிடைக்கவில்லை. முடிந்த அளவு நினைவில் இருப்பதை வைத்து அப்படியே மறுபிரதி செய்யலாம் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது …
போட்டியின் முடிவு தானே. கதையின் முடிவில் ….
ஊஞ்சல்
“இந்தப் பனில எங்கடா போற?” அம்மாவின் கேள்விக்குப் ‘பேப்பர்’ என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு வாசலுக்கு ஓடினேன்.
ஈரம் காயாத படியில் உட்கார்ந்து துணி நனைந்ததைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படமால் சூடாகக் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே பேப்பர் படிப்பதைப் போன்ற சுகம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் இன்று என் மனம் இதை எல்லாம் ரசிக்கிற நிலையில் இல்லை .. கண்கள் பேப்பரில் இருந்தாலும் மனது முழுவதும் எதிர் வீட்டையே மேய்ந்து கொண்டிருந்தது.
முந்தா நாள் மாலை தான் அவர்கள் குடி வந்திருந்தார்கள்.
அழகான பெண்ணின் அப்பாவிற்கு எந்த அந்தரங்கமும் இருக்க முடியாது. அலுவலகத்தில் எத்தனை முறை மெமோ வாங்கினார் என்பதில் இருந்து , அவர் முண்டா பனியன் எத்தனை இடங்களில் கிழிந்திருக்கிறது என்பது வரை ஒரே நாள் இரவில் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களின் நாட்குறிப்பேடுகளிலும் ரகசியமாய் குறிப்பெடுக்கப்பட்டிருக்கும். அழகான பெண்ணின் அம்மாவிற்குத் தான் எத்தனை சலுகைகள் ! ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம் என்பதில் இருந்து , தள்ளுவண்டிக்காரன் கொசுறாகத் தரும் கொத்த மல்லி வரை … கொடுத்து வைத்தது யாரென்றால் அழகான பெண்ணின் தம்பி தான். அவனுக்கு அவுட் தரும் அம்பயர் அந்தத் தெருவில் நிச்சயம் இல்லை.