பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: tamil poem

யௌவனத்தில் நடுங்கும் இரவு

17 Monday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

காதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

மூன்றாம் ஜாமம் முடிவதற்கு

சற்றுமுன்பு

என் இரவினில் இறங்குகிறாய்

சலனமில்லாத் தெப்பம் போல்

என்னைப் புதைத்திருக்கும் இருளுள்

உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய்

முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய்

ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும்

அறையின் ஏகாந்தத்தை

உன் ஒற்றைச் சிரிப்பில்

ஊதி அணைக்கிறாய்

கூரையிலிருந்து

பெரு மழையாய் பொழிகின்றன

பனியில் உறைந்த உனது செதில்கள்

ஆயிரம் தலைகளுடன்

சுவர் மொத்தமும் நெளிகின்றது

உனது நிழல்

ஆலகாலம் போல்

காற்றை நிறைக்கிறது

உனது சுவாசம்

உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று

இந்த இரவிற்கென

என்னை ஆயத்தப்படுத்துகிறது

எனது முதல் துளிக் கண்ணீரை

நா நீட்டிச் சுவைக்கிறாய்


மரணத்தின் வேட்கை போல்

எவ்வளவு உறிஞ்சியும்

தீரவேயில்லை உன் தாகம்

உனது யௌவனத்தில்

நடுங்கும் என் இரவு

உன்னை ஆயாசமடையச் செய்கிறது

அருகே படர்கிறாய்

உனது ஆலிங்கனத்தில்

பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின்

படபடப்பு

பற்றி எரிகிறது படுக்கை

உறைபனி விரல்களால்

மார்பினை வருடிக்

கண்களை மூடச் செய்கிறாய்

காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும்

நூற்றாண்டுகளின் தனிமையினையும்

என் காதோரமாய் சபிக்கிறாய்

பின்

உனது பற்களை அழுத்தி

என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சின்னஞ் சிறிய உலகம்

14 Friday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, kavithaigal, Love poems, tamil Kavithaigal, tamil poem

 

கோடி யுகங்களுக்கு முன்

ஒரு பேருந்து நிலையத்தில்

உன்னைச் சந்தித்திருந்த பதினைந்தாம் நிமிடத்தில்

அனுப்பியிருந்தாய் முதல் குறுஞ்செய்தியை

பார்த்ததில் மகிழ்ச்சி என்றாய்

சிறிய உலகம் என்றாய்

நான்கு தெருக்கள் தள்ளி இருந்தும்

இத்தனை நாட்களாய் சந்திக்கவேயில்லையே

என ஆச்சர்யம் கொண்டாய்

எந்தத் தெரு என நீயும் சொல்லவில்லை

நானும் கேட்கவில்லை

அலைபேசி எண் வாங்கினாய்

தந்தாய்

அடிக்கடி பேசுவோம் என்றாய்

நீயும் அழைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை

நீ பேருந்தில் ஏறிச்சென்ற பின்பும்

அங்கேயே நின்று கொண்டிருந்தேன்

நீ கூறிய சிறிய உலகத்தில் 

அதே பேருந்து நிலையத்தில்

எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

இன்னுமொரு யுகம் தாண்டி

அதேபோல் தற்செயலாய்

இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது

கலங்கரைவிளக்க வணிக வளாகத்தின்

இசைக்கோப்புகளும் பொம்மைகளும்

வாழ்த்து அட்டைகளும் வாசனைகளும்

நிறைந்திருக்கும் கடையொன்றின் புத்தகப் பிரிவில்

மறுபடியும் சிறிய உலகமென்றாய்

இந்தப் புத்தகக்கடை

ஊரிலேயே ப்ரியமான இடமென்றாய்

வெகு நாட்களாய் நீ தேடிக் கொண்டிருந்த புத்தகம்

என் கையில் இருக்க

ஆச்சர்யம் கொண்டாய்

நீ கூறிய சிறிய உலகத்தில்

இந்த ஊரிலேயே

உன் ப்ரியத்துக்குகந்த புத்தகக் கடையில்

இதே புத்தகத்தை

எத்தனை முறை கைகளில் வைத்துக் கொண்டு

நின்றிருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

என்னிடமிருந்து அந்தப் புத்தகத்தை

இரவல் வாங்கிக் கொண்டாய்

நான்காவது மாடியின் உணவகம் ஒன்றில்

சுமாரான தேநீர் அருந்தினோம்

பர்கர் கடையின் முன்பு

கான்க்ரீட் கோமாளி அமர்ந்திருந்த இருக்கையில்

அருகருகே அமர்ந்து கொண்டோம்

அவனுடன் புகைப்படம் எடுத்துத்தரச் சொன்னாய்

வார்த்தைகள் தீர்ந்துபோயின

நகரும் ஏணிப்படிகள் வேகமாக இறங்கின

மின்சார ரயில் நிலையத்திற்கு தூரம்

குறைவாக இருந்தது

சரியான நேரத்திற்கு ரயிலும் வந்தது

அடுத்தமுறை சந்திக்கையில்

புத்தகத்தைத் திரும்பத் தருவதாய்

குறுஞ்செய்தி அனுப்பினாய்

நீயும் தரவில்லை

நானும் கேட்கவில்லை

அந்த சுமாரான சுவை கொண்ட தேநீர்

இன்னுமொருமுறை கிடைக்கவேயில்லை

நான் அருகே அமர்கையில்

கோமாளி ஒருபோதும் சிரிக்கவேயில்லை

மின்சார ரயில் கம்பி பற்றி

கையசைத்துச் செல்லும் எல்லாரிடமும்

உனது சாயல் தேடித் தோற்றிருந்த ஒரு நாளில்

காலம் என்னை

உனது சிறிய உலகத்தில் இருந்து

நாடு கடத்த முடிவு செய்திருந்தது

எத்தனை யுகங்கள் தாண்டியும்

இனி நிகழாது நம் சந்திப்பு

கடல்தாண்டிக் காத்திருக்க

ஒருவேளை நீ வரக்கூடும்

என்றொரு இடமுமில்லை

இல்லாத ஒன்றை எப்படி

இழக்கக்கூடும்

உனக்கென முதலும் முடிவுமான 

குறுஞ்செய்தி அனுப்பி

கிளம்பும் விமானத்தைப் பழி சொல்லி

அணைத்து வைத்தேன் அலைபேசியை

இரவும் பகலும்

நிலமும் கடலும்

கடந்த

நீண்ட பயணம் அது

தரை இறங்கியதும்

உயிர் வந்த அலைபேசி

உன் மூன்றாவது குறுஞ்செய்தியை

படிக்கிறாயா என்றது

பதிலை எதிர்பாரா கேளிவியின் பதிலை

எதிர்கொள்ளத் திராணியின்றி

மீண்டும் அணைத்தேன்

பனியும் கனவும்

கண்ணீரும் புன்னகையும்

கடந்த

மூன்று தினங்களுக்குப் பின்

குறுஞ்செய்தியைத் திறந்தேன்

கடித உறை மட்டுமே இருக்க

உனது செய்தி

வரும் வழியில் எங்கோ

அலைக்கற்றைகளில் கரைந்திருந்தது

என்ன அனுப்பியிருந்தாய்

அந்தக் குறுஞ்செய்தியில் ?

மீண்டும் நீ சொல்லப்போவதுமில்லை

நான் கேட்கப் போவதுமில்லை

கடிதங்களில் காதலித்தவர்கள்

பாக்யவான்கள்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சிகப்பு நிற மேப்பிள் வயலின்

13 Thursday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 1 Comment

Tags

கவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

 

உனது பாடல்

இன்றும் நன்றாக இருந்தது

உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்

இரண்டாவது பின்வரிசை

வலதுபுறக் கடைசியில்

உனது பாடலுக்கு

வயலின் வாசிப்பவன் நான்

ஒரேயொரு முறை

என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்

எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்

அழகாய் இருப்பதாகச் சொன்னாய்

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்

வசந்தத்தின் உச்சத்தில் மாலை

தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்

வயலினுக்காய் வீணாக வேண்டாம்

கைகள் கோர்த்து நடக்கலாம் வா

எனச் சொல்லியிருந்திருக்கலாம்

கடற்கரை ஒட்டிய

மாலுமிகள் உணவகத்தில்

ஒயின் பருகியிருந்திருக்கலாம்

அங்கிருக்கும் நடனமேடையில்

கால்கள் வலிக்க

ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்

படகுத்துறை பாலத்தில்

மஞ்சள் விளக்கொன்றின் கீழ்

உனக்காக எழுதிய பாடல்களை

படித்துக் காட்டியிருந்திருக்கலாம்

அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்

ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்

மாறாக நான் ஒரு கனவானைப் போல்

நடந்து கொண்டேன்

கண்டிப்பாக பிறிதொருமுறை

வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்

புன்னகைத்தேன்

பின் ஒருபோதும் நாம்

பேசிக்கொள்ளவயில்லை

நீ உன் பாடலும்

நான் என் வயலினுமாய்

இசை மட்டுமே நமக்கான

பேசு மொழியாயிருந்தது

ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்

உதிர்ந்து கொண்டேதானிருந்தன

யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்

யார் யாரோ ஒயின் பருகினர்

யார் யாரோ நடனமாடினர்

யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்

வயலினை உடைத்திருந்தேன் நான்

இதே போல நேற்றைய இரவினில்

அடுத்த கோடை விடுமுறையில்

மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி

வராமலேயே போன

எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்

அதற்கும் முந்தைய இரவுகளில்

பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு

நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்

திரையரங்கமொன்றில்

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்

இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்

வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்

இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்

இன்னபிறவாகவும் இருந்தாய்

எல்லா இரவுகளிலும்

ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத

கனவானாகவே இருந்தேன்

கார்காலம் ஒரு பேயைப் போல

நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது

துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்

ஆயத்த ஒலி கேட்கிறது

புறாக்கள் சுவர் பொந்துகளில்

பதுங்கத் துவங்கியிருக்கின்றன

சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு

இந்த நகரத்தில்

ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்

நான்

ஒரு காலி மதுக்கோப்பை

இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை

கண்ணாடி மீன் தொட்டி

உன்னுடன் இருந்த பொழுது

என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்

ஏன் இப்பொழுது மட்டும்

அறை மொத்தமும்

ஏன் இந்த இரவு

தவறவிட்ட தருணங்களையும்

அது குறித்தான கற்பனைகளையும்

என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே

பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது

***    

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

டிராகன் இளவரசி

12 Wednesday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

நீ வருவதாய் சொன்ன

வாசலின் முன்பு தான்

நின்று கொண்டிருக்கிறேன்

வந்திருப்பது ஏன் என்று

உனக்கும் புரியும்

நீ வரச்சொன்ன காரணமும்

எனக்குத் தெரியும்

இன்னும் எத்தனை காலம்

இதே விளையாட்டு

நான் தட்டப்போவதும் இல்லை

நீ தாழ்பாள் இடவும் இல்லை

பின்னே எதற்கிந்தக் கதவு

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

நீ தள்ளிச் செல்வதும்

நான் தயங்கி நிற்பதும்

நீ மறுத்துப் போவதும்

நான் மரத்துப் போவதும்

மீண்டும்

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

கண்ணீரும் கவிதையும்

வார்த்தை மாறாமல்

நடப்பது தானே

ஏற்கனவே படித்த புத்தகம்

எத்தனை முறை புரட்டினாலும்

மாறியா போய்விடும்

கடைசி வரி

நான் வேறு புத்தகத்தைத்

தொடப்போவதுமில்லை

நீ இந்தப் புத்தகத்திற்குள்

வரப்போவதுமில்லை

பின்னே எதற்காக எழுதப்பட்டது

நமது கதை

இந்தக் கோட்டையின் உச்சியில்

உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும்

வேறில்லை என்பது

நான் மட்டுமே அறிந்த ரகசியம்

இத்தனைக்கும் பிறகு

உன் கூந்தல் ஏணி

கீழே வரக் காத்திருக்கக்

காரணம் ஒன்று தான்

நம் முதல் முத்தத்தைப்

பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு

நமக்குத் தரப்படவேயில்லை

பின் எப்படித் தீரும்

நம் சாபம்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பறவைகளின் ஆலாபனை

11 Tuesday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 1 Comment

Tags

கவிதை, Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

நத்தையின் கூடு போல்

சுருண்டு கிடக்கிறது உன் வனம்

மீளமுடியா சாபம் போல்

நீண்டு நெளிந்து உன் பாதைகள்

கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே

கண்களைக் குருடாக்குகின்றன

உன் நட்சத்திரப் பூக்கள்

நாணல்கள் விம்மித் தணியும் சத்தம்

நடுங்கச் செய்கிறது

ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும்

பறவைகளின் ஆலாபனைகள்

உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன

எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய்

என் யட்சி

சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன

உன் ரகசியங்களின் சாவியை

தூரத்துப் பாறை ஒன்று

சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல

காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

வழியெங்கும் உன் வாசம் போர்த்தி

தேடித் திரிந்து தேகம் துவண்டு

உன்னிடமே யாசிக்கிறேன்

உன் கருணையின் ஊற்றினை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

என் யட்சி

தேனீக்கள் போலத் துளைக்கிறது

இந்தப் பனி

உனது ஆயிரம் நாவினால்

தீண்டு

பற்றி எரியட்டும்

இந்தக் காடு

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: