பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: tamil

யௌவனத்தில் நடுங்கும் இரவு

17 Monday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

காதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

மூன்றாம் ஜாமம் முடிவதற்கு

சற்றுமுன்பு

என் இரவினில் இறங்குகிறாய்

சலனமில்லாத் தெப்பம் போல்

என்னைப் புதைத்திருக்கும் இருளுள்

உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய்

முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய்

ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும்

அறையின் ஏகாந்தத்தை

உன் ஒற்றைச் சிரிப்பில்

ஊதி அணைக்கிறாய்

கூரையிலிருந்து

பெரு மழையாய் பொழிகின்றன

பனியில் உறைந்த உனது செதில்கள்

ஆயிரம் தலைகளுடன்

சுவர் மொத்தமும் நெளிகின்றது

உனது நிழல்

ஆலகாலம் போல்

காற்றை நிறைக்கிறது

உனது சுவாசம்

உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று

இந்த இரவிற்கென

என்னை ஆயத்தப்படுத்துகிறது

எனது முதல் துளிக் கண்ணீரை

நா நீட்டிச் சுவைக்கிறாய்


மரணத்தின் வேட்கை போல்

எவ்வளவு உறிஞ்சியும்

தீரவேயில்லை உன் தாகம்

உனது யௌவனத்தில்

நடுங்கும் என் இரவு

உன்னை ஆயாசமடையச் செய்கிறது

அருகே படர்கிறாய்

உனது ஆலிங்கனத்தில்

பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின்

படபடப்பு

பற்றி எரிகிறது படுக்கை

உறைபனி விரல்களால்

மார்பினை வருடிக்

கண்களை மூடச் செய்கிறாய்

காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும்

நூற்றாண்டுகளின் தனிமையினையும்

என் காதோரமாய் சபிக்கிறாய்

பின்

உனது பற்களை அழுத்தி

என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

டிராகன் இளவரசி

12 Wednesday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

கவிதை, Love poems, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

நீ வருவதாய் சொன்ன

வாசலின் முன்பு தான்

நின்று கொண்டிருக்கிறேன்

வந்திருப்பது ஏன் என்று

உனக்கும் புரியும்

நீ வரச்சொன்ன காரணமும்

எனக்குத் தெரியும்

இன்னும் எத்தனை காலம்

இதே விளையாட்டு

நான் தட்டப்போவதும் இல்லை

நீ தாழ்பாள் இடவும் இல்லை

பின்னே எதற்கிந்தக் கதவு

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

நீ தள்ளிச் செல்வதும்

நான் தயங்கி நிற்பதும்

நீ மறுத்துப் போவதும்

நான் மரத்துப் போவதும்

மீண்டும்

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

கண்ணீரும் கவிதையும்

வார்த்தை மாறாமல்

நடப்பது தானே

ஏற்கனவே படித்த புத்தகம்

எத்தனை முறை புரட்டினாலும்

மாறியா போய்விடும்

கடைசி வரி

நான் வேறு புத்தகத்தைத்

தொடப்போவதுமில்லை

நீ இந்தப் புத்தகத்திற்குள்

வரப்போவதுமில்லை

பின்னே எதற்காக எழுதப்பட்டது

நமது கதை

இந்தக் கோட்டையின் உச்சியில்

உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும்

வேறில்லை என்பது

நான் மட்டுமே அறிந்த ரகசியம்

இத்தனைக்கும் பிறகு

உன் கூந்தல் ஏணி

கீழே வரக் காத்திருக்கக்

காரணம் ஒன்று தான்

நம் முதல் முத்தத்தைப்

பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு

நமக்குத் தரப்படவேயில்லை

பின் எப்படித் தீரும்

நம் சாபம்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

ஜன்னல் பூனைகள்

08 Saturday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ 2 Comments

Tags

கவிதை, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

 

 

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்

 

பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்

 

யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம்

வா

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்

 

மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து

ஊதித் தீ மூட்டுவோம்

 

அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்

 

சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

 

***

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பிரம்மச்சாரி உலா

25 Tuesday Sep 2012

Posted by rejovasan in கவிதை

≈ 11 Comments

Tags

poem, tamil

 

காலணிகளை அடுக்கிடத் தேவையில்லை

காலுறைகளை

தவ்வக் காத்திருக்கும் தவளைகள் போலச் சுருட்டி

எங்கு வேண்டுமாலும் எறிந்துவைக்கலாம்

ஆடைகள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்

உள்ளாடைகள் வவ்வால்கள் என

கதவிடுக்குகளில் காணக்கிடக்கலாம்

குளியலறையின் கால்வைக்கும் இடம் தவிர

மீதமெல்லாம் ஆனந்தமாய் அழுக்காக்கி வைக்கலாம்

நாற்காலிகள் காணாமல் போனவைகள் பற்றிய

அறிவிப்புகளில் இருக்கலாம்

சர்க்கரை உப்பு இன்ன பிற அவசியமற்ற சரக்குகளின்

கையிருப்பு பற்றிக் கவலை வேண்டாம்

முக்கியமாய் காப்பிப் பொடிக்கும் தேநீர்த் துகள்களுக்கும்

ஆறு வித்யாசங்கள் அறிந்து வைக்க அவசியமில்லை

பக்கம் கொள்ளாத அளவு இருக்கவே இருக்கிறது

பிரம்மச்சாரியின் அறையொன்றில் இருப்பதன் அனுகூலங்கள்  

அதன் அவஸ்தைகள் மட்டும் உறைப்பதேயில்லை

எதிர்பார்க்காத நாளொன்றில் அறையுடன்

பெண்பால் அறிமுகம் நடக்கும் வரை …

 

————————————————————–

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

களிமண்ணின் கதை

22 Sunday Jan 2012

Posted by rejovasan in கவிதை

≈ 16 Comments

Tags

poem, tamil

ஒன்பது மாத சொச்சம்

விடாது பெய்திருந்த மழையின்

மறுநாளில் கண்டெடுத்திருந்தார்கள்

அந்தக் களிமண்ணை …

 

எத்தனை முறை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும்

எதற்கு வேண்டுமானாலும்

எதற்குள் வேண்டுமானாலும்

மாற்றிக்கொள்ள

மாறிக்கொள்ள முடிந்திருந்தால்

ஊரில் எல்லாருக்கும் அதைப் பிடித்திருந்தது …

 

தண்ணீரைப் போல என்றாலும் – அது

தண்ணீரல்ல களிமண் என

மறந்து போனார்கள் …

 

அதைக் கண்டெடுத்த குயவன்

அவன் பழக்கப்படி பானையாக்கலாம் என்றான் …

 

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதுதான் சரி என்றார்கள் …

 

ஊரின் உபாத்தியாயர்

அ னா ஆ வன்னா சொல்லிக்கொடுத்து

வேலைப்பாடுகள் கொண்ட கூஜா ஆக்கினால்

பட்டணத்திற்கு விற்கலாம் என்றார் ..

 

பக்கத்து வீட்டுக்காரகள் அதுதான் சரி என

பிரம்பெடுத்துத் தந்தார்கள் …

 

அந்தத் தெருவின் சாயமிடுபவன்

நிறப்பூச்சுப்பூச்சு செய்தால்

வெளிநாட்டில் மவுசு என்றான் …

 

பக்கத்து வீட்டுக்கார்கள் அது தான் சரி என

அதற்கு முன் விலைபோன

உறவினர்களின் பானைகள் பற்றிய கதைகளை

விடியும் வரை பேசியிருந்தனர் …

 

யார் விருப்பப்படியும் மாறிக்கொண்டே

இருக்க முடிந்ததால்

எதுவாகவும் ஆகமுடியவில்லை களிமண்ணால் …

களிமண்ணாகவே இருந்தது

கடைசி வரைக்கும் …

 

களைத்துப் போன எல்லாரும்

அதை என்ன செய்வதென்று தெரியாமல்

குப்பைத்தொட்டியில் போட முடிவு செய்தனர் ..

 

எல்லாரும் உறங்கிய நள்ளிரவில் ரகசியமாய்

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

ஒரு முறையாவது வாய் திறந்து

அதற்கு என்ன வேண்டுமென பேசியிருந்தால்

அது களிமண்ணாகவே இல்லாமல்

இருந்திருக்கக் கூடுமென ….

 

—————————————————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: