Tags
கிட்டத் தட்ட ஒன்னரை வருடங்களாகியிருக்கிறது , ஏற்கனவே எழுதப்பட்ட கதை ஒன்றை எழுதியவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள , என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள .
மோனாரிட்டா சென்ற வருடம் ஜனவரியில் பதிவிடப் பட்டு , ஒரே நாளில் மீண்டும் திருத்தி எழுதலாம் என நீக்கப்பட்டுவிட்ட கதை (??!) . என்னை நானே கொஞ்சமேனும் புரிந்து கொள்ள இந்த நாட்கள் இடம் தந்திருக்கின்றன. நன்றாக இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? , இது என் கதை என்பதில் எந்தவிதப் பொய்யும் இல்லையே . அதே போல எங்கும் வெறுமையும் வெற்றிடமுமே சந்திக்க நேர்ந்தாலும் இது என் வாழ்கை என்பது தானே நிதர்சனம் .
தேயும் நிலவை ரசிக்கும் அதே மனதோடு ஓயும் இந்த வாழ்வையும் பார்க்கப் பழகவேண்டுமென்பது மட்டும் தெரிகிறது . விரக்தியா , வெறுமையா என்பது புரியவில்லை ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காயங்கள் ஆறும் , தழும்புகள் மறையக் கொஞ்ச நாட்களாகுமல்லவா? அல்லது இந்தத் தழும்பு அப்படியே மாறாமல் நின்றும் போகலாம் . கோடையின் தனிமை போன்ற குரு யாருமேயில்லை.
எது எப்படி ஆயினும் இதுவும் கடந்து போகட்டும் .
கல்லூரி இரண்டாவது வருடத்தில் கதை போல எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே என்னுடன் இருந்து எல்லா இம்சைகளையும் சகித்து வரும் பாலாவிற்கு இந்த நூறாவது பதிவு .
————————————————————————
அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .
புத்தகத்தை மூடி மடியில் வைத்தேன் . எல்லா தேவதைக் கதைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கின்றன . சூனியக்காரியோ , கொடுமைக்காரச் சித்தியோ , கிளியில் உயிர் உரித்து வைத்திருக்கும் மந்திரவாதியோ. தேவதைகளோ , ராஜகுமாரர்களோ தான் மாறுகிறார்கள் கதை மாறுவதில்லை . கதையின் முடிவில் முத்தமிடவும் மறப்பதில்லை .
சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் , சரியாக இரவு ஒன்பதரை மணிக்கு அவள் என்னை பார்த்துப் புன்னகைத்த வினாடியில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது . ஒரு வேளை தேவதைக் கதைகள் இது போலவும் தொடங்கக் கூடும் .