Tags

 

எல்லாரும் உறங்கிப்போன

இரண்டாம் சாமங்களின் இருண்ட பக்கங்களில்

விழித்தெழுந்து உலவத் துவங்குகின்றன

கரப்பான்கள்

 

காற்றின் அந்தரங்கப் பிரதேசங்களில்

தம் வாழ்வின் ரகசியங்களை

நீண்ட பெரு மீசையால்

துழாவியபடி இருக்கின்றன

 

அவைகளின் திக்விஜயங்களின் 

எதிர்பாராத தருணங்களில்

வெளிப்பட்டு

நம்மைத் திகைக்கச் செய்கின்றன

 

வெகுநாட்கள் முன்பு

மடித்தடுக்கி வைக்கப்பட்ட பழந்துணிகள்

உதறப்படுகையில்

அவைகள் குதித்தோடும் மறுநாட்களில்

புதிதாகத் துணிகளிடை தோன்றிய

வெள்ளை உருண்டைகளின்

மனத்தில் மயங்கி சில காலம்

அவைகளையே சுற்றிச் சுற்றி வந்து

பிடிபடுகின்றன

பின் பரஸ்பரம் இரண்டும்

மற்றவைகளைச் சகித்துக் கொண்டு

வாழப் பழகி விடுகின்றன

 

எச்சில் துப்பும்

பீங்கான் பேழைகளின் உட்புறத்திலோ

வழுக்கும் தரைகளின் அடியிலிலோ

அவைகளின் விஸ்தரிக்கப்பட்ட வாசஸ்தலங்கள்

நம் கண்களுக்குக் கட்புலனாவதே இல்லை

 

மேலும் கரப்பான்களுக்கு

அழிவில்லை

அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுபவைகள்

வெளியூர் பயணங்களில் இருக்கும்

அம்மாக்களின் கனவுகளில்

பாத்திரங்களின் இடுக்குகள் வழியே

மீசையை மட்டும் நீட்டி ஆட்டியபடி

காலத்திற்கும் காட்சி தந்த வண்ணம் இருக்கின்றன .