ஒரு பிரத்யேக நாளுக்காய்
காத்திருந்த
உன் விருப்பத்துக்குகந்த கிண்ணத்தில்
ஒரு கேக் துண்டுப் புதிரை
நிறுத்திச் சென்றிருக்கிறாய்
வளையமிட்டிருக்கிறாய்
உன் மாய விரல்களால்
தொடாமலே எறும்பொன்று
வெள்ளைச் சர்க்கரைப் பூச்சு
ஓரமாய் உருக
தோல் சுருங்க
உச்சியின் செர்ரிப்பழம்
பாதி மௌனத்தில்
புகைந்த மெழுகுவர்த்தி
உதடுகள் குவிக்குமுன்
என்ன வேண்டினாய் ?
காலிக் கோப்பை அருகில்
ஆழத்தில்
காய்ந்த ஒயின் கறை
விளிம்பில் உன் பாதி இதழ்
சொற்களை விடுத்து
உன் குரலை
எடுத்துச் சென்றிருக்கிறாய்
நீ களைந்த ஆடைகளை
மொய்த்தபடி அந்துப்பூச்சிகள்
உனது தானியங்களுக்காகவும்
ப்ரியங்களுக்காகவும்
உப்பரிகையில் காத்திருக்கின்றன
புறாக்கள்
நீ துவட்டிய
தூவாலை மட்டும்
வெய்யில் பார்த்தபடி
மீண்டும் மீண்டும்
எங்கே புறப்பாடு
எப்பொழுது மீள்வருகை
எந்த குறிப்பொட்டியுமில்லை
குளியலறைக் கண்ணாடி மேல்
யாயொரு தடையமும்
இன்றி
காற்றில் கரைந்திருக்கிறாய்
கிளம்பும் அவசரத்தில்
கூட்டிச் செல்ல மறந்திருக்கிறாய்
என்னை
கதையின்
கடைசி வரியினில்
அவிழ்கிறது புதிர்
ஆலகாலக் கோட்டினை
அழித்துவிட்டு
இனிப்பிற்கு வழி விடுகிறேன்
நடுங்கத் தொடங்குகிறது
உன்மத்தத்தில் எறுப்பு
***