Tags

, , , ,

நத்தையின் கூடு போல்

சுருண்டு கிடக்கிறது உன் வனம்

மீளமுடியா சாபம் போல்

நீண்டு நெளிந்து உன் பாதைகள்

கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே

கண்களைக் குருடாக்குகின்றன

உன் நட்சத்திரப் பூக்கள்

நாணல்கள் விம்மித் தணியும் சத்தம்

நடுங்கச் செய்கிறது

ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும்

பறவைகளின் ஆலாபனைகள்

உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன

எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய்

என் யட்சி

சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன

உன் ரகசியங்களின் சாவியை

தூரத்துப் பாறை ஒன்று

சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல

காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

வழியெங்கும் உன் வாசம் போர்த்தி

தேடித் திரிந்து தேகம் துவண்டு

உன்னிடமே யாசிக்கிறேன்

உன் கருணையின் ஊற்றினை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

என் யட்சி

தேனீக்கள் போலத் துளைக்கிறது

இந்தப் பனி

உனது ஆயிரம் நாவினால்

தீண்டு

பற்றி எரியட்டும்

இந்தக் காடு

***