Tags
மழை பெய்து கொண்டிருந்த
ஒரு மாலை நேரம்
நீ தனிமையில் இல்லை
நானிருக்கிறேன் உனக்கு
சத்தம் போட்டபடி
நடந்து கொண்டிருந்தது
கடிகார முள் …
கண்கள் மூடி மௌனமாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
புத்தர்
எப்பொழுது இருட்டாகும் என
அதன் பின்னாலிருந்து
அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டுப்
போனது பல்லி …
சத்தம் பிடிப்பதில்லை எனக்கு
வெளிச்சதிற்குப் பிடிப்பதில்லை
என்னை …
வீட்டுவாசலில்
நாய் கூடக் கட்டப்படவில்லை
எனக்குப் பிடிக்காது என்பதற்காக அல்ல
நாயின் குறைப்பு
வருகிறவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக
மேலும்
எனக்குக் காவல் தேவையில்லை
திருடுவதற்கோ விற்பதற்கோ
எதுவுமில்லை என்னிடம்
என்னைத்தவிர …
என்னைப் போலவே
கரையாகிப் போயிருந்த
ஜன்னல் வழியே
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்
என்னை யாரும் பார்த்துவிடாத வண்ணம்
முகத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்த
சாரலில் என் நினைவுகள்
கரைந்து அழுக்காக்கிக்கொண்டிருந்தன ….
கட்டில் மெத்தை போர்வைகள்
போல மரத்துப்போகவில்லை
நானும் என்று
நம்ப வைத்துக் கொண்டிருப்பது
இந்தப் பழைய நினைவுகளே …
வரலாற்றில் ப்ரிதிவிராஜனைப்
படித்த பொழுது நான் கூட நம்பினேன்
எனக்கான ராஜகுமாரன் ஒருநாள்
குதிரையேறி வருவான் என்று …
இன்றும் பல ராஜகுமாரர்கள்
வந்து கொண்டுதானிருக்கின்றனர்
நடந்தோ சைக்கிளிலோ
கார்களிலோ
ஆனால் என்னைத்
தூக்கிச் செல்லத்தான் ஆளில்லை …
சுயம்வரத்தை வேடிக்கை பார்க்கத்தான்
பெருங்கூட்டம் …
நிச்சயமாய் திரும்பக் கிடைக்கப்போவதில்லை
மார்கழியில் நான்
கோலம் போட்ட இரவுகள்
இன்று
புள்ளிகள் வைக்க மட்டுமே
எனக்கு நேரம்
கோலம் போட
தினமும் ஒவ்வொருவர்
விடியும் முன்பே அது
வியர்வையில் அழிந்தும் விடும்
நைந்து போன காகிதத்தில்
வரையப்பட்ட
நனைந்து போன கோலம் நான் …
என் வீட்டுப் பூக்கள் மட்டும்
வாடியே பூக்கின்றன ..
வாசம் வீசும் மல்லிகைப்பூ
எனக்கு மட்டும்
சுவாசம் பறித்துக் கொண்டது …
ஆசை அறவே இல்லை
மோகம் மட்டுமே
இங்கே முப்பது நாட்களும்
அச்சம் மடம் நாணம்
பயிற்புடன்
கற்பும் கரைந்து போனது
மறந்தும் போனது …
ஆடைகள் வெறும்
அலங்காரதிற்குத் தான்
நாடகம் நடந்துகொண்டிருக்கும் போதே
ஒப்பனை கலைக்கப்படும் …
விளக்கேற்ற ஆளில்லை
விளக்கணைக்கவே
ஆர்வம் பலருக்கு …
ஆம் என்று
விளக்கணைத்துச் சென்றது
மின்சாரம் …
பலருக்கு
வசதியாய் போயிருந்த இருட்டு
இப்பொழுது எனக்கும் …
தூரத்தில் மின்னலொன்று
வானம் கிழித்துச் சென்றது
கிழிந்த வானத்தின் வழியே
புன்னகைத்தான் அவன் … Continue reading