பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Category Archives: நெடுங்கவிதை

சற்றே நீண்ட குறுங்கவிதைகள்

கல்லறை ரோஜாக்கள் …

08 Friday Jun 2012

Posted by rejovasan in கவிதை, நெடுங்கவிதை

≈ 9 Comments

Tags

poem. love, sad poem, tamil poem


 

மழை பெய்து கொண்டிருந்த

ஒரு மாலை நேரம்

நீ தனிமையில் இல்லை

நானிருக்கிறேன் உனக்கு

சத்தம் போட்டபடி

நடந்து கொண்டிருந்தது

கடிகார முள் …

 

கண்கள் மூடி மௌனமாய்

புன்னகைத்துக் கொண்டிருந்தார்

புத்தர்

எப்பொழுது இருட்டாகும் என

அதன் பின்னாலிருந்து

அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டுப்

போனது பல்லி …

 

சத்தம் பிடிப்பதில்லை எனக்கு

வெளிச்சதிற்குப் பிடிப்பதில்லை

என்னை …

 

வீட்டுவாசலில்

நாய் கூடக் கட்டப்படவில்லை

எனக்குப் பிடிக்காது என்பதற்காக அல்ல

நாயின் குறைப்பு

வருகிறவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக

மேலும்

எனக்குக் காவல் தேவையில்லை

திருடுவதற்கோ விற்பதற்கோ

எதுவுமில்லை என்னிடம்

என்னைத்தவிர …

 

என்னைப் போலவே

கரையாகிப் போயிருந்த

ஜன்னல் வழியே

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்

என்னை யாரும் பார்த்துவிடாத வண்ணம்

முகத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்த

சாரலில் என் நினைவுகள்

கரைந்து அழுக்காக்கிக்கொண்டிருந்தன ….

 

கட்டில் மெத்தை போர்வைகள்

போல மரத்துப்போகவில்லை

நானும் என்று

நம்ப வைத்துக் கொண்டிருப்பது

இந்தப் பழைய நினைவுகளே …

 

வரலாற்றில் ப்ரிதிவிராஜனைப்

படித்த பொழுது நான் கூட நம்பினேன்

எனக்கான ராஜகுமாரன் ஒருநாள்

குதிரையேறி வருவான் என்று …

 

இன்றும் பல ராஜகுமாரர்கள்

வந்து கொண்டுதானிருக்கின்றனர்

நடந்தோ சைக்கிளிலோ

கார்களிலோ

ஆனால் என்னைத்

தூக்கிச் செல்லத்தான் ஆளில்லை …

சுயம்வரத்தை வேடிக்கை பார்க்கத்தான்

பெருங்கூட்டம் …

 

நிச்சயமாய் திரும்பக் கிடைக்கப்போவதில்லை

மார்கழியில் நான்

கோலம் போட்ட இரவுகள்

இன்று

புள்ளிகள் வைக்க மட்டுமே

எனக்கு நேரம்

கோலம் போட

தினமும் ஒவ்வொருவர்

விடியும் முன்பே அது

வியர்வையில் அழிந்தும் விடும்

நைந்து போன காகிதத்தில்

வரையப்பட்ட

நனைந்து போன கோலம்  நான் …

 

என் வீட்டுப் பூக்கள் மட்டும்

வாடியே பூக்கின்றன ..

வாசம் வீசும் மல்லிகைப்பூ

எனக்கு மட்டும்

சுவாசம் பறித்துக் கொண்டது …

 

ஆசை அறவே இல்லை

மோகம் மட்டுமே

 இங்கே முப்பது நாட்களும்

அச்சம் மடம் நாணம்

பயிற்புடன்

கற்பும் கரைந்து போனது

மறந்தும் போனது …

 

ஆடைகள் வெறும்

அலங்காரதிற்குத் தான்

நாடகம் நடந்துகொண்டிருக்கும் போதே

ஒப்பனை கலைக்கப்படும் …

 

விளக்கேற்ற ஆளில்லை

விளக்கணைக்கவே

ஆர்வம் பலருக்கு …

 

ஆம் என்று

விளக்கணைத்துச் சென்றது  

மின்சாரம் …

பலருக்கு

வசதியாய் போயிருந்த இருட்டு

இப்பொழுது எனக்கும் …

 

தூரத்தில் மின்னலொன்று

வானம் கிழித்துச் சென்றது

கிழிந்த வானத்தின் வழியே

புன்னகைத்தான் அவன் … Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

ஆதாமும் அதே ஆப்பிளும் … உரையாடல் கவிதைப் போட்டிக்காக

12 Tuesday Jan 2010

Posted by rejovasan in கவிதை, நெடுங்கவிதை

≈ 14 Comments

Tags

poem

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் – இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சில கடவுள்கள் சீக்கிரம் செத்துப்போவர் – 2

14 Friday Aug 2009

Posted by rejovasan in தொடரும் ..., நெடுங்கவிதை

≈ 2 Comments

Tags

கடவுள், கவிதை, பிச்சை, poem

 

கடவுளான பின்

 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

 

சும்மாயிருக்க முடியுமா ..?

 

 

 

என்னென்ன கடமைகள்

 

என்னென்ன கவலைகள்

 

என்னென்ன சலுகைகள்

 

 

 

பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …

 

 

நான் வாங்கும் சம்பளம் போல

 

உடனே தீர்ந்து போனது

 

ஒட்டு மொத்தக் காகிதமும் …

 

 

 

மிட்டாய் வாங்கித் தருவதாக

 

வாக்குறுதி தந்து

 

என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து

 

கிழித்த காகிதங்கள்

 

கணத்தில் காணாமல் போயின …

 

 

 

இன்றைக்கு இது போதும்

 

கடவுள் வேலை கடினமானதோ

 

களைத்துப்போனதே பட்டியலுக்கே…

 

கண்கள் கெஞ்ச

 

துவங்கலாம் வேலை நாளையிலிருந்து

 

தூங்கிப்போனேன் …

 

—————————————

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சில கடவுள்கள் சீக்கிரம் செத்துப்போவர் – 1

12 Wednesday Aug 2009

Posted by rejovasan in தொடரும் ..., நெடுங்கவிதை

≈ 3 Comments

Tags

கடவுள், கவிதை, பிச்சை, poem

 

 

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை …


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும் …


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம் …


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம் …


—————————–


அதனால் …


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம் …


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன் …

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

எங்க ஊருக் கதையொன்னு …

05 Tuesday May 2009

Posted by rejovasan in கவிதை, நெடுங்கவிதை

≈ 3 Comments

Tags

poem, village girl, village love

 

அய்யாமாரே அம்மாமாரே

எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே

கொஞ்ச நேரம் நில்லுங்க …

எம்முன்னால இல்லாத

என்னாச அவரோட

கடைசியா நாம்பேசும்

இந்தப் புழுதி மேட்டுக் காதலோட 

மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு

எந்தப்பு இதில் என்னன்னு

எதாச்சும்  தெரிஞ்சதுன்னா

எங்கிட்ட  சொல்லுங்க ….

 

எல்லாப் பெண்டுக போலவே நானும்

எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்

தாயமாடக் கோடு போட்டும்

ஒத்தக் காலில் நொண்டி ஆடி

கண்ணக் கட்டிப் பாண்டி பாடி

சந்தோசமாத் தான இருந்தேன் ..

 

எப்ப ஒன்னப் பாத்தேனோ

அப்பவே நான் தொலைஞ்சு போனேன்

உள்ளுக்குள்ள செவந்து போனேன் …

 

 

எங்கப்பனோட அழுக்குத் துணிக்கு

எஞ்சாமி உந்துணிய

புத்தி கெட்டுப் போன வண்ணான்

மாத்தி வந்து தந்து போனான் …

உடுப்ப நானும் கொடுக்கயில

உசிர சேத்துக் கொடுத்தேனே …

 

பசி மறந்தேன் பந்தியிலும்

தூக்கமில்லே ராசந்தியிலும்

நீர் மழிச்சுப் போட்ட மீசை

மறைச்சு வச்சேன் முந்தியில …

 

நீர் தொட்ட கத்தாலைக்கு

செம்பகப்பூ வாசமின்னேன்

என் வீட்டு எருமைச் சத்தம்

எசபோலத் தோண நின்னேன் …

 

உம்பாதம் பட்ட கரடுக்கெல்லாம்

கண்ணில் ஒத்தி முத்தம் தந்தேன்

நெரிஞ்சி முள்ளுப் பாத கூட

சொர்க்கம் போகும் பாதயின்னேன்

நீ போன பூக்குமின்னேன் …

 

ஒன்னப் போலத் தானடி நானும்

துளித் துளியா மாறுறேன் நாளும்

ஒடம்புக்கும் முடியல தலகாலு புரியல

ஒம்மொகந் தாண்டி வேறேதும் கண்ணுக்குத் தெரியல …

 

தண்ணியில நடக்க நெனைக்கறேன்

தரையில நான் மெதந்து கெடக்கறேன்

இடுப்புக் கச்சம் அவுந்ததறியாம

கடகண்ணியில் நடந்து திரியறேன்

கதிரருவா கையிலெடுத்து

வெரலறுத்து சிரிச்சு நிக்கறேன் …

 

ஒங்கழுத்துத் தாலி செய்ய

என்னுயிரு கயிராகும்

ஒன்நெத்திப் பொட்டு வைக்க

எங்கடைசி சொட்டு ரத்தமும் சாகும் …

 

கரும்புக் காட்டில் வச்சு

கண்ணப் பாத்துச் சொன்னீகளே

வெட்டிபோட்டக் கரும்போட

செத்துப்போச்சே ஒம்ம வார்த்தைகளும் …

 

வெதநெல்லு வாங்கியார

சந்தைக்கு நாம போகயில

விம்மீன்கள வெலைக்கு வாங்கி

வெளையாடத் தருவேன்னீக

 

வெதநெல்லும் வெளஞ்சிருச்சு

விம்மீனுக்கும் விடிஞ்சிருச்சு

என்னாசக் காட்டில் மட்டும்

புல்லு மொளச்சுப் போனதென்ன

வெளக்கு அணைஞ்சு போன பின்னும்

எண்ண மிதக்கும் பூச்சி இங்க …

 

சிங்கம் போல ஒரு புள்ள

தோள் மேல வருவாண்டி

பட்டுப் போல ஒரு பாப்பா

இடுப்போரம் இருப்பாடி

சொமந்த சொம போதுமடி

அதுக்கு மேல நா சொமப்பேன்

அடிநெஞ்சில் உன்னையும் சேத்து…

 

நம்ம பத்திக் காத்து கேட்டா

வரப்போர புல்லு எல்லாம்

வசனத்தோட கத சொல்லுமே

சொன்ன கத முடியுமுன்னே

கள எடுத்தது யார் குத்தம் …

 

ஆத்தங்கரைப் பிள்ளையாரே

அசையாம இருக்கீரே

பாற கூடக் கரஞ்சிருக்கும்

பாவி ஊத்தின தண்ணிக்கு

கம்மாத்தண்ணி வத்திப் போயும்

கருண காட்ட மனசில்லையே…

ஒன்னப் போல ஆக்கிடாத அவர …

 

எங்க அந்தி நேர முத்தத்துக்கெல்லாம்

நீர்மட்டும் தானே சாட்சி

பொய் சாட்சி சொல்லியாச்சும்

அத்த பொண்ணு அம்பிகையோ

அக்கா மக அஞ்சுகமோ

அவருக்கு கட்டி வச்சா

ஒங்கோயில் பாதையில

காலத்துக்கும் கல்லாயிருப்பேன்

 

அரளி வெத அரைக்கனுமின்னா

எனக்கடுத்தவளும் அதில் பங்கு கேப்பா..

 

அப்பனாத்தா தொங்கின கயத்துல

எந்தாலி தொங்கனுமா…

 

மக்க சனம் என்னடி சொல்லும்

கத கட்டி நம்மளக் கொல்லும் …

 

மொத்தக் குடும்பம் அழுகயில

தொலைஞ்சு போச்சு என்னழுகச் சத்தம்

புரிஞ்சுக்குவ நீ மட்டும் – நம்புது

என் புது மெட்டிச் சத்தம்

 

எத்தனையோ கியாபகங்கள
நெஞ்சுக் குழியில் பொதச்சுப்புட்டு
எல்ல தாண்டிப் போகப் போறேன்
என் நெனப்ப எல்லாம் விட்டுப்புட்டு …

மாசம் ஏழோ அது தாண்டி எட்டோ
திரும்பத் தானே போறேன் நானும்
மனசில் ஒன்ன சொமந்து போறேன்
வயத்தில் ஒன்ன சொமந்து நிப்பேன்

என்னோட முடியட்டும்
உனக்காச்சும் விடியட்டுமின்னு
பொட்டப்புள்ள பொறந்துச்சுன்னா
புத்தி சொல்லிப் பொத்தி வைப்பேன்
அடிநெஞ்சில் ஒன் நெனைப்பெரிக்க
ஆம்பிள்ளையா பொறந்துப்புட்டா
கொஞ்ச நேரம் அழுதுப் புட்டு
அய்யனாரே ஒம்பேர வப்பேன் …

 

 

 

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: